Friday, March 22, 2013

வளரும் கவிதை: பெண்ணுரிமைப் பாடல்கள்

வளரும் கவிதை: பெண்ணுரிமைப் பாடல்கள்

Tuesday, December 14, 2010

சங்கத்தமிழ் விழா


உ.வே. சாமிநாதய்யர்

உ.வே. சாமிநாதய்யர்

 
உ.வே. சாமிநாதய்யர் ஒரு பண்டிதர். ஆரம்ப முதலே தமிழ்ப் பெரியோரிடம் முறையாக முழு நேர மாணாக்கனாகக் கல்வி கற்றவர். அவருக்குத் தமிழைத் தவிர வேறெந்த மொழியும் தெரிந்திருக்க அவர் வாய்ப்பளிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

காலத்தால் குறைபட்ட, சிதையுண்ட பண்டைய தமிழ் இலக்கியப் பிரதிகள் அன்று அவரால் முடிந்த அளவு பூரணமாகவும் பொருள் பொதிந்ததாகவும் படிப்போர் ஓரளவு எளிதாக அணுகக்கூடிய முறையிலும் பதம் பிரித்தும் பதிப்பிக்கும் பணியே அவருக்கு முழு மனநிறைவு அளித்திருக்கிறது. அவருக்கிருந்த சிறு நண்பர் குழாமையும் அவருடைய பணியை ஒட்டியே அமைத்துக் கொண்டார்.
தமிழ் இலக்கிய ஆய்விலிருந்து வேறெந்த ஈடுபாடும் தன்னைப் பிரிப்பதற்கு அவர் இடம் தரவில்லை.

சாமிநாதய்யர் தன் வாழ்வின் இரண்டாம் பகுதியில்தான் சுயமாகப் படைக்கத் தொடங்குகிறார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு அவருக்கு ஒரு திருப்புமுனை. உண்மையில் அவர் சுயமாக எழுதிய சிறிய மற்றும் பெரிய உரைநடைப் படைப்புகள்,அவர் சொல் சொல்லாகத் தேடி ஆராய்ந்து பொருள் அறிந்து பதிப்பித்த பண்டைய நூல்களைவிட ஏராளமானோர் அணுகி அனுபவிக்க வாய்ப்பளித்தன.
இரு பத்திரிகைகள் குறிப்பாக இத்துறையில் பங்கேற்றன.
ஒன்று கலைமகள். இன்னொன்று ஆனந்த விகடன். கலைமகள் அவரை ஆரம்ப முதலே சிறப்பாசிரியராகப் போற்றிப் பாராட்டியது.
தீவிர அறிவாளிகள், விஞ்ஞானிகள் அப்பத்திரிகையின் ஆலோசகர்களாக இருந்ததால் சாமிநாதய்யரின் பங்கு வியப்பளிக்கக்கூடியதல்ல. ஆனால் ஆனந்த விகடனின் இலக்கும் தன்மையும் கலைமகளிலிருந்து மாறுபட்டது. கலைமகள் மாத ஏடு. அது பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த அனைத்துமே நிதானமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டியவை. ஆனால் ஆனந்த விகடன் வார இதழ் பரபரப்பு, அன்றாடக் கவலைகள், அக்கறைகள், பிரச்சினை களையே பிரதானமாகக் கொண்டது. பரவலான வாசகர்களை எட்டுவது அதன் முக்கிய இலக்காதலால் அது கொண்டிருக்கும் கதை,கட்டுரைகள் எளிமைப்படுத்தப்பட்டவை. ஆனால் அத்தகைய இதழும் சாமிநாதய்யரைப் பங்கு கொள்ளவைத்தது.
அவரும் எத்தரப்பினரும் மனத்தாங்கல் அடையாத விதத்திலும் அதே நேரத்தில் மொழி, பொருள் இரண்டும் உயர்ந்த மதிப்பீடுகளையே சார்ந்ததாகவும் இயங்கினார். இதை எழுதினோமே, இப்படி எழுதினோமே என்று அவர் சிறிதும் மனக் கிலேசம் அடைந் திருக்க வழியில்லை.

அய்யரவர்களுக்கு இரு ஆசான்கள்.
திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இரண்டாவது, வித்துவான் தியாகராசச் செட்டியார்.
செட்டியார் அவர்கள்தான் அய்யரவர்களைக் கல்லூரியாசிரியராகப் பணியாற்றப் பாதையும் ஊக்கமும் தந்தவர்.

தியாகராசச் செட்டியாரே திருமணத்திற்குப்பின் கல்விக்கூடங்களில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரிசிரபுரத்தில் பட்டாளம் பகுதி என்று இன்றும் உள்ளது. திருச்சிக் கோட்டை அப்பகுதியைச் சேர்ந்ததுதான். பட்டாளத்தாருக்கு உள்ளூர் மொழிப் பரிச்சயம் ஏற்படத் தமிழ் கற்பிக்கப்பட்டது. தியாகராசச் செட்டியார் ஏற்றுக்கொண்ட மாதச் சம்பள ஆசிரியப் பணி அந்தப் பள்ளியில்தான். சம்பளம் மாதம் பத்து ரூபாய்.

சாமிநாதய்யர், தியாகராசச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறு சிறு கோர்வையான கட்டுரைகளால் கலைமகள் மாத இதழில் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் எந்த இடத்திலும் தொய்வு தோன்றாதபடியும் கூறியதையே திரும்பக் கூறும் தவறு இல்லாதிருத்தலும் வியப்பளிக்கிறது. சாமிநாதய்யர் தன் மனத்தில் தன் ஆசானின் வாழ்க்கை வரலாற்றை எவ்வளவு தெளிவுடனும் கோர்வையுடனும் உருவகித்துக் கொண்டி ருந்தார் என்பதற்கு வித்துவான் தியாகராச செட்டியார் நூல் சிறந்த எடுத்துக் காட்டு.
இதே பண்பு பின்னர் அவர் ஆனந்த விகடனில் என் சரித்திரம் எழுதியபோதும் வெளிப்பட்டிருக்கிறது. முதிர்ந்த வயதில் காலம் மற்றும் காட்சிகள் கலைந்து, வரிசை மாறியும் தகவல்கள் மாறியும் மனத்தில் தோன்றும் என்பார்கள்.ஆனால் வித்துவான் தியாகராச செட்டியார், என் சரித்திரம் ஆகிய நூல்கள் இன்றைய கணிணிகள் உதவி யுடன் இயற்றியதுபோல அவ்வளவு சீராக உள்ளன.

வித்துவான் தியாகராச செட்டியார் நூலில் சாமிநாதய்யர் செட்டியார்பால் கொண்டிருந்த பெருமதிப்பு அவர் தகவல்கள் அடுக்கிக்கொண்டு செல்லும் விதத்தில் தெரிகிறது. அவர் மிகை என்று தோன்றக் கூடியது எதையும் பயன்படுத்தியதில்லை. ஆத்திகர்கள் உயர்வு நவிற்சியைப் பயன்படுத்தும் இடத்தில்கூடச் சாமிநாதய்யர், மேற்கத்திய மதசார் பற்றப் பார்வை,உரைநடையில் ஏற்படுத்தியிருந்த சிறு சிறு மாற்றங்களை, உலகத்து மொழி களில் மிகப் பழைமையானதாகிய தமிழில் அன்றே பயன்படுத்தியிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் ஆங்கிலத்தில் தன் பெயர் எழுதக்கூடிய அளவுதான் பரிச்சயம் அடைந்திருந்தார்!

சாமிநாதய்யர் எழுதிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் இரு பாகங்களில் 1933-34இல் வெளிவந்தது. சாமிநாதய்யரின் உரைநடை, தொடக்கத்தி லிருந்தே நவீனமாகவும் எளிதாகவும் இருந்தாலும் மகாவித்துவான் வரலாறு எளிதான நூல் அல்ல. சாமிநாதய்யரின் குருபக்தி விசேஷமானது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி ஆசாரங்கள் எவ்வளவு கடுமையாக அனுசரிக்கப்பட்டிருக்க வேண்டும்! ஆனால் சாமிநாதய்யர் பிள்ளையவர்களின் முடிவுவரை பக்கத்திலேயே இருந்திருக்கிறார். நள்ளிரவுக்கு மேல் நெடுநேரம் நினைவிழந்த ஆசிரியர் பக்கத்திலேயே கண்விழித்தி ருக்கிறார். ஆசிரியர் கண்விழித்து ஏதோ சொல்ல வாயெடுத்திருக்கிறார்.
அது திருவாசகமென்று புரிந்து கொண்டு சாமிநாதய்யர் திருவாசகத்தில் அடைக்கலப் பகுதியை வாசித்தார்.
சவேரிநாதப் பிள்ளை மகாவித்துவானைத் தமது மார்பில் தாங்கிக்கொண்டார்.
அவர் நெற்றியில் விபூதி இடப்பட்டது.
சிறிது நேரத்தில் அவர் உயிர் ஸ்தூல உடலிலிருந்து விடுதலை பெற்றது.

சாமிநாதய்யர், மகாவித்துவான் சரித்திரத்தில் பயன்படுத்தியிருக்கும் உரைநடைக்கும் அதற்குப் பிந்தைய படைப்புகளில் உணரப்படும் உரைநடைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முந்தையதில் ஓர் இறுக்கம் காணப்படுகிறது. பல செய்யுள்கள் எடுத்துக் காட்டப்படுவதால் வாசிப்போர் தம் மனநிலையை அடிக்கடி மாற்றிக்கொள்ளத் தேவைப் படுகிறது.
வித்துவான் தியாகராச செட்டியார் நூலிலும் சில செய்யுட்பகுதிகள் நேர்ந்தாலும் பொதுவில் ஒரு சரளம் இருக்கிறது. இதை அவர் செட்டியார் அவர்களிடம் கொண்டிருந்த அந்நியோன்யம் சாத்தியமாக்கியது என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.

சாமிநாதய்யரின் இரு ஆசான்களும் மகாவித்துவான்கள் என்றாலும் தியாகராசச் செட்டியார் அன்று நாட்டில் மாறிவந்த நாகரிகத்தின் சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்தது.
ஓரிடத்தில் மாதச் சம்பளம் பெறுவதான நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசிரியர்களுக்குப் புதிய அனுபவம்.
சீடர்கள் வரும் நேரத்தில் கற்பிப்பதும் சீடர்கள் பணிவிடை செய்துவரும்போது சூசகமாக அறிவூட்டுவதும்தான் நாட்டில் காலம் காலமாக இருந்துவருவது. குறித்த நேரத்தில் தனி உடை அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்று, மணியடித்துத் தொடங்கி மணியடித்து முடிக்கும் வகுப்புகளை நடத்த ஒரு புது மனநிலை கொள்ள வேண்டியி ருத்தது.
தியாகராசச் செட்டியார் அவர்களுக்கு இது சாத்தியமான அளவுக்கு மகாவித்துவான் பிள்ளையவர்களால் முடிந்திருக்குமா என்பது உறுதியாகக் கூற முடியாது.
தியாகராசச் செட்டியார் காலத்தில் தமிழ் கற்பிக்கும் பாதை ஒரு புதிய திசையில் செல்ல நேர்ந்தது என்பதில் தவறில்லை.
இதைப் பின்னர் சாமிநாதய்யரும் இன்னும் ஏராளமான தமிழ் அறிஞர்களும் பின்பற்றி உலக மக்களிடையே தமிழ் அறிவைப் பரப்பினார்கள்.

சீடர்களோ நண்பர்களோ எந்த அளவுக்கு ஆசிரியரின் குடும்பத்திலும் இல்லத்திலும் பங்கு பெறலாம் என்பது கேள்விக்குரியது. என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இந்த முரண்பாட்டை உணர வேண்டியிருந்தது. நான் பல மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து செல்லப்போகிறேன்; அப்போது நிறைய நண்பர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை அவர்களுக்கே கிடைத்த பெருமையாகக் கொண்டாடிக் கொண்டி ருந்தார்கள்.
அவர்களில் பெரும்பான்மையோர் என் மனைவிக்கோ என் குழந்தை களுக்கோ தெரிந்தவர்கள் அல்ல.
உண்மையில் அன்று என் குடும்பத்தாருக்கு நான் மிகவும் முக்கியமாகக் கூற வேண்டிய தகவல்கள் சொல்லப்படாமலேயே போய்விட்டன.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் இறுதிக் கணத்தில் அதே கூரையடியில் அவருடைய வாழ்க்கையே தன் வாழ்க்கையாகக் கொண்ட அவருடைய மனைவியாரும் மகனும் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் பிள்ளையவர்களின் இறுதிக் கணங்களில் அவரை நெருங்க முடியாதபடிதான் இருந்திருக்கும் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.
கடைசிக் காலத்தில் சைவர்கள் நெற்றியில் விபூதி இடுவது ஆண்டாண்டுக் காலமாக இருந்து வரும் பழக்கம்.
ஆனால் அது பிள்ளையவர்களின் குடும்பத்தாருக்குக் கிட்டவில்லை.
சாமிநாதய்யர் எழுதியதில் பிள்ளையவர்களின் அந்தரங்க உறவுகள், தனிப்பட்ட செயல் கள் இடம் பெற வில்லை. அவருடைய புலமை, கவித்துவம், மாணாக்கர்பால் அவர் கொண்டிருந்த அன்பு, இவைதான் இடம் பெறுகின்றன.

தியாகராசச் செட்டியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எழுதப்பட்ட விரிவு அவருடைய மறைவு குறித்து அல்ல.
சாமிநாதய்யர் 'சரம தசை' என்று தலைப்பிடப்பட்ட அத்தியாயத்தில் இதை எழுதியி ருக்கிறார் (இறுதிச் சடங்குகளின்போது வடமொழியே பயன்படுத்துவோர்கூட 'சரம சுலோகம்' என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.)
பத்து வரியில் முடிவு தெரிவிக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையான செட்டியார் அவர்களின் பேச்சும் மங்கிவிட்டது. முன்பே ஏற்பாடு செய்திருந்தபடி ஒருவர் தேவாரம் படிப்பதற்காக வந்திருந்தார். ஒரு கட்டத்தில் செட்டியார் கையைத் தட்டினார்.
அதன் குறிப்பு சிலருக்கே விளங்கியது.
வேறொரு அன்பர் சரியாகப் படிக்கத் தொடங்கினார்.
இறுதிக் கணத்தில்கூடச் செட்டியார் அவர்களுக்குத் தமிழ் பிழையாகப் படிக்கப்படுவதை உணர முடிந்து அதைத் தடுக்க முடிந்திருக்கிறது.

இங்கும் நாம் அக்காட்சியை முழுமையாக ஊகிக்க முடியவில்லை. ஆசான், சீடன் இருவருக்கும் தமிழ் ஒன்றுதான் அதிமுக்கியமாக இருந்திருக்கிறது. இந்த மொழிப் பற்று அவர்களை இன்னும் மேன்மையானவர்களாக்கியது என்பதில் ஐயமில்லை.

சாமிநாதய்யர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்களைத் தந்தையாகப் பாவித்தார் என்றால் தியாகராசச் செட்டியார் அவர்களை மூத்த அண்ணனாகக் கருதினார். "என் ஆசிரியரிடம் (மகாவித்துவான்) எனக்கு முன் படித்தவராதலின் இவர் எனக்கு முன்னவர்; என் பால் அன்பு வைத்துப் பழகியமையின் என் நண்பர்; இன்ன இன்னபடி மாணாக்கர் களிடம் நடந்துவர வேண்டுமென்பதையும் சில நூற்பொருள்களையும் வேறு விஷயங் களையும் எனக்கு அறிவுறுத்தியமையின் என் ஆசிரியர்களில் ஒருவர்; எனக்குத் தம் உத்தியோகத்தை அளித்துப் பிறர் கையை எதிர்பாராத நிலையைச் செய்வித்தமையின் ஒரு வள்ளல்."

(சாமிநாதய்யர் இதை ஒரே வாக்கியமாக எழுதியிருக்கிறார். ஹென்றி ஜேம்ஸ் என்ற ஆங்கில இலக்கிய நாவலாசிரியரை 'மாஸ்டர் ஆஃப் செமிகோலன்' என்பார்கள். அதாவது அரைப்புள்ளி பயன்படுத்துவதில் வல்லவர். சாமிநாதய்யரின் மேற்கண்ட வாக்கியத்திலும் இத்தேர்ச்சி காணப்படுகிறது. ஓலைச்சுவடி எழுத்திலிருந்து அச்சுச் சாதனத்துக்கு எவ்வளவு இயல்பாக மாறித் தேர்ச்சியும் அடைந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.)

அய்யரவர்களின் வாழ்க்கையில் சீவக சிந்தாமணி பதிப்பு பல்வேறு அனுபவங்களுக்கு உட்படுத்தியது. அது நச்சினார்க்கினியரது உரையுடன் வந்தால்தான் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று 1886இல் இந்து பத்திரிகையில் ஓர் அனாமதேயக் கடிதம் வெளியாயிற்று. சி.வை. தாமோதரம் பிள்ளையும் சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கப் போவதாகச் செய்தி வெளியிட்டிருந்தார். அவர் புதுக்கோட்டையில் நீதிபதியாக நியமனம் பெற்றவர். அப்படிப்பட்ட பெரியோரிடம் மனவருத்தம் ஏற்படும்படியாகிவிட்டதே என்று சாமிநாதய்யர் வருந்தினார்.

சீவக சிந்தாமணி பதிப்பு சாமிநாதய்யருக்கு நிறையப் புகழ் கொணர்ந்தாலும் மனம் வருந்தும்படியாகவும் சில விளைவுகள் இருந்தன.
அவர் ஆயுள் பரியந்தம் வருந்தக்கூடியதொரு பிழைக்கு அவரே காரணமாகிவிட்டார்.

அச்சு வேலை முடிந்து முதலில் நூறு பிரதிகள் நூல் தயாராகி அய்யரிடம் கிடைத்தன. கும்ப கோணத்தில் நூலுக்காகக் கையொப்பம் செய்தவர்களுக்கு விநியோகம் செய்ய ஒரு நண்பரிடம் கொடுத்தார். பின்னர் திருவாவடுதுறை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலும் தானே விநியோகம் செய்து திருச்சிக்குச் சென்றார்.

திருச்சிராப்பள்ளி சென்று உறையூர் அடைய இரவு இரண்டு மணியாகியிருக்கிறது. அந்த நேரத்தில் செட்டியார் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார் (அந்த அளவு இருவருக்கும் நெருக்கம் இருந்திருக்கிறது). செட்டியார் அதற்குள் நூலைப் பார்த்திருக்கிறார்.
"என்ன வேலை செய்திருக்கிறீர்கள்! . . . உங்களுக்கும் மகாவித்துவான் அவர்களுக்கும் திருவாவடுதுறை மடத்தாருக்கும் எனக்கும் பெரிய கீர்த்தியைச் சம்பாதித்து வைத்துவிட்டீர்கள்," என்று தியாகராசச் செட்டியார் மகிழ்ந்தார்.

சாமிநாதய்யர் நூலிலிருந்து சுவை மிக்க சில பகுதிகளை அவரே படித்துக் காட்டினார். சில சொற்களின் உருவத்தைக் கண்டுபிடிக்க சாமிநாதய்யர் அடைந்த கஷ்டங்களைக் கேட்டுச் செட்டியார் மிகவும் வருந்தினார்.

"இப்படிக் கேட்டு வந்த அவர், கடைசியில் ஒரு விஷயத்தைச் சொன்னார். . ." என்று சாமிநாதய்யர் துவங்குகிறார். செட்டியார் மேற்கொண்டு பேசுகிறார்: "இதில் பல பேருடைய உதவிகளைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே, எந்த இடத்திலாவது என் பெயர் வந்திருக்குமென்று எதிர்பார்த்தேன். நீங்கள் எழுதவில்லை. இந்த விஷயத்தில் உங்களிடத்தில் சிறிது வருத்தம்தான்."

சாமிநாதய்யர் ஒரு காரணம் உண்டு என்கிறார். அது உலகுக்குத் தெரிய வேண்டாம் என்றும் முடிவு செய்திருக்கிறார். ஆனால் சுயசரிதத்தில் வருத்தம் தெரிவித்ததோடு அவர் 'தவறு'க்கு மூன்று வகையில் ஈடு செய்ததாகக் கூறுகிறார். ஐங்குறுநூற்றுப் பதிப்பைச் செட்டியாருக்கு உரிமையாக்கினார். கும்பகோணம் கல்லூரியில் பட்டப் படிப்பில் தமிழ் படிக்கும் ஒரு சைவ மாணவனுக்கு ஆண்டு தோறும் செட்டியார் பெயரில் (அந்த நாளிலேயே) ஆண்டுக்கு நாற்பத்தெட்டு ரூபாய் நிதியுதவி பெறுவதற்கு ஏற்பாடு செய்தார். அவருடைய வீட்டிற்குத் 'தியாகராச விலாசம்' என்று பெயரிட்டார்.

சாமிநாதய்யருக்கு 19ஆம் நூற்றாண்டில் மகத்தான தமிழ் ஆசான்கள் கிடைத்தார்கள். அவரும் அவர்கள் பெருமைக்குப் பெருமை சேர்ப்பாராக விளங்கினார்.
ஒவ்வொரு கட்டத்திலும் தன் ஆசான்களையும் தன்னைப் போஷித்தவர்களையும் வணங்கியே இயங்கினார். சீடனாக இருப்பதையே சாதனையாகக் கொண்டு வாழ்ந்தார்.

சாமிநாதய்யர் சாதாரண வாசகர்களும் பங்கு கொள்ளக்கூடியதாக நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால் இந்தியப் பாரம்பரியம் ஒரு வித அனாமதேய உணர்வில்தான் இயங்கிவந்திருக்கிறது.
உண்மையில் மகத்தான கலைப் படைப்புகளை யார் உருவாக்குகிறார்கள் என்று இன்றுவரை நாம் உறுதியாக அறிய முடியவில்லை.
பெருமளவுக்கு நாம் இலக்கியாசிரியர்களின் சிறப்புப் பெயர்களையே அறிந்திருக் கிறோம். சாமிநாதய்யர் தன்னைப் பற்றியும் இன்னும் பலரைப் பற்றியும் எழுதியிருந்தாலும் அடிநாதமாக ஒரு அனாமதேய சுருதியிருக்கிறது.
எல்லாம் தெரிந்ததுபோலவும் இருக்கும்.
ஆனால் நிறைய ஊகங்களுக்கும் இடம் இருக்கும்.
அந்த விதத்தில் சாமிநாதய்யர் இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியத்தில் அங்கம் வகிப்பவராகிவிடுகிறார்

Monday, December 13, 2010

பாட்டி வீடு

முருங்கை மரம்..



             ரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது.  பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே.  மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே.

இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை.  இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள்.  இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம். 

முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர்.  முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.  வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.
பழங்காலத்தில் அரசர்கள் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாகக் கொடுத்து வந்துள்ளனர்.  அதனால் அவர்கள் பலமுடன் போர் புரிந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும்.  எளிதில் உடையும் தன்மை கொண்டது.  இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே, முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

இது இந்தியா முழுமைக்கும் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டவை. 

முருங்கையின் அனைத்து பாகங்களுமே அதிக மருத்துவக் குணம் கொண்டது.

முருங்கை இலை
செரிமந்தம் வெப்பந் தெறிகுந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும்-மறமே
நெருங்கையிலை யொத்தவிழி நேரிழையே-நல்ல
முருங்கை யிலையை மொழி

- அகத்தியர் குணபாடம்
பொருள் -
முருங்கை இலையால் மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிநோய், மூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.

முருங்கைக் கீரையை சமைத்து உண்டுவந்தால் உடல் வலுப்பெறும்.  இரத்தம் சுத்தமடையும்.  இதில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும்.  மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

வயிற்றுப்புண்ணை ஆற்றும்.  அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும்.

இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும்.  நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும். 

உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும்.  பித்தத்தைக் குறைக்கும்.

இளநரையைப் போக்கும்.  சருமத்தைப் பளபளக்கச் செய்யும். 

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி.  தாய்ப்பாலை ஊறவைக்கும்.  வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வர வேண்டும்.

முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும்.

முருங்கைப் பூ

நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது.   முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.  பித்த நீர் குறையும்.  வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.  அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  இல்லற உறவில் நாட்டம் கொள்ளச் செய்யும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும்.

முருங்கைப் பிஞ்சு

முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.  இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும்.  எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

முருங்கைக் காய்

அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது.  உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது.  அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்தான்“ முருங்கைக் காய்.


மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும்.  மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும்.  சளியைப் போக்கும். 

அடுத்த மரத்துக்கு அப்புறம் போவோம்............


விதை
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில்  வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.  விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும்.  உடல் சூடு தணியும்.

இலைக்காம்பு

சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.

முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.  தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.  வறட்டு இருமல் நீங்கும்.    இரு பாலாருக்கும் நல்ல உடல் வன்மையைத் தரக்கூடியது.

முருங்கைப் பட்டை

முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். 

முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும்.  சிறுநீரைத் தெளிய வைக்கும்.

முருங்கை வேர்

வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல்,  இரைப்பு, முதுகுவலி நீங்கும்.

Saturday, December 4, 2010

சில கேள்விகளும் சில பதில்களும்

கவிஞர் அறிவுமதியோடு...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>















1) தாங்கள் சினிமாவிற்கு பாடல் எழுத வந்ததற்கான காரணம்?

கையயழுத்துப் போடத்தெரியாத… ஆனால் வேகாத வெய்யவிலும் புன்செய்க்காட்டு மண்ணை.. மழை நனைப்பதற்கும் மேலாக.. தம் வியர்வைத் துளிகளால் நனைத்து நனைத்து பயிர்களை விளைவிப்பவர்களாகவும்.. பயிர்களோடு பயிராய்ப் பாடல்களை விளைவிப்பவர்களாகவும் இருந்த எம்மூர் தாய்களில் ஒருத்திக்கு மகனாகப் பிறந்ததுதான்.. நான் பாடலாசிரியனாக வந்ததற்குக் காரணம்.


2) ஏன் சினிமாவை விட்டு விலகினீர்கள்?
திரையிசைப் பாடல் எழுதுவதை விட்டுத்தான் திரையுலகிலிருந்து விலகியிருக்கிறேன். மற்றபடி.. எம் தமிழ்ப் பண்பாட்டை வலியுறுத்தும் ஆவணப்படங்களையும்.. குறும்படங்களையும் இயக்கிக் கொண்டுத்தானே இருக்கிறேன். விரைவில் .. ஒரு முழு நீளப் படத்திற்கான அறிவிப்பும் வரலாம்.

3) நல்ல பாடல்களை கொடுத்துவிட்டு, மக்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக சினிமாவை விட்டு விலகியது சரியான முடிவா?
இசைப் பாடல்கள் என்பவை.. ஓர் இனத்திற்கு ஆயுள் முழுக்கப் குடிக்கிற தாய்ப்பால். தாய்ப்பாலில் நஞ்•கலக்க.. கருத்தாலும் சரி.. சொல்லாலும் சரி.. என் மனம் ஒப்பமாட்டேன் என்கிறது. என்ன செய்யச் சொல்கிறீர்கள்!

4) தமிழ் சினிமாவின் இடைக்காலத்தில் இளையராஜா, வைரமுத்து கூட்டணி இசை, பாடலுக்கு சம முக்கியத்துவம் கொடுத்தது. பிறகு இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பின்னர் வார்த்தைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது. (சில இசையமைப்பாளர்களாலும்) தற்போது வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் உள்ளது. இந்த சூல்நிலையில் நீங்கள் ஏன் சினிமாவுக்குப் பாடல் எழுதக்கூடாது?
வளர்முக நாடுகளில்... இசைப் பாடல் என்பதை.. பேருந்துகளிலும்.. மகிழ்வுந்துகளிலும்.. திருமண வீடுகளிலும்.. ஏன் இறப்பு வீடுகளிலும்.. ஏன்..ஏன் கோயில்களிலும் கூட உயிர் உருகக் கேட்பதற்குப் பதிலாக.. •யசிந்தனைகளுக்கான.. நன்பர்களோடு கலந்துப் பே•கிற குழுசிந்தனைகளுக்கான நேரங்களில் மேல் கொட்டப்படுகிற ஒலிக்குப்பைகளாகவே பயன்படுத்துகிறார்கள்.

மற்றும்..நம் இனம்.. எம் ஊர் மக்களின் வாழ்க்கையின் வலி வாங்கி வருகிற திரைப்படங்கள்.. மிக..மிக..மிகக்குறைவு. காதல் பாடல்களில்.. இலக்கிய நயமாக எழுதினாலும்.. நாளைய பெண்ணியப் பார்வையில்.. குற்றவாளியாகவே நிற்கவேண்டிய நெருக்கடி. அதுதான் நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டேன்.

5) இசை அமைப்பாளர்களின் ஆதிக்கம் பாடலாசிரியர்கள் மீது எந்தளவிற்கு அதிகரித்து உள்ளது?
இசைஞானி, ஏ.ஆர். ரகுமான், எஸ்.ஏ. ராஜ்குமார், வித்யா சாகர், சிற்பி, தினா.. என எல்லா இசையமைப்பாளர்களிடமும் நான் பணியாற்றியுள்ளேன். எவரும்.. எந்த ஆதிக்கமும் என் மீது செலுத்தியதில்லை. துள்ளல் மெட்டுக்குப் பாடல் எழுதமாட்டேன். என்று கூறி… முதன் முதலாகத் தந்தனுப்பிய மெட்டை… அழகம் பெருமாளிடம் திருப்பி அனுப்பினேன். ‘மே மாதம்’ படத்தில் வைரம் எழுதிய ‘மார்கழிப் பூவே’ போல் ஒரு மெல்லிய மெட்டில்தான் அவரோடு இணைய விரும்புகிறேன் என்றும் சொல்லியனுப்பினேன். தனது மெட்டை.. திருப்பி அனுப்பிவிட்டேன் என்று கோபப்படாமல் அப்படியா சொன்னார்.. அப்படியானால் அவரை ஒரு பாடல் எழுதச் சொல்லி எடுத்துவாருங்கள் .. மெட்டமைக்கிறேன் என்று சொன்னவர் ஏ.ஆர்.ரகுமான் நாம் நம் தன்மானத்தை உண்மையாக மதித்தால்.. நம் தன்மானத்தை மற்றவர்களும் மதிப்பார்கள்.

6) தமிழ் சினிமா கலாச்சாரத்தை சீரழக்க வழிவகுக்குகிறதா? இல்லை தமிழ் மற்றும் பண்பாட்டை காப்பாற்றும் வகையில் உள்ளதா?
அமெரிக்கத் திரைப்படங்கள் புதிய புதிய ஆயுதங்களை.. உலகிலுள்ள ஏழைநாடுகளில் விற்பனை செய்வதற்காகவே தயாரிக்கப்படுகிற நிலை.
ஈரான் போன்ற திரைப்படங்கள்.. மனித மனங்களை மேலும் மேலும் மிருதுப்படுத்துவதற்காகவே தயாரிக்கப் படுகிற நிலை.
இன்று .. ஓர் உண்மையைச் சொல்கிறேன்.. உலகப் புகழ்பெற்ற திரைப்படங்கள்.. போதைப் பொருள்களை மீறி தமிழ்நாட்டிற்குள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
தொழிற்சாலைக் கழிவுகளால் மா•பட்டிருக்கும் ஆற்றுத் தண்ணீரை.. புதிய அறிவுகள் சூடிய இளைய வெள்ளம் மிக விரைவில் பாயும் என்று நம்புகிறேன்.
என் நம்பிக்கைக்கான முன் பெயர்கள்.. தம்பி பாலா.. சேரன்.. சீமான்.. அமீர்..பாலாஜி சக்திவேல்.. சசி.. லிங்குசாமி…

7) பெரிய கவிஞர்கள் எல்லாம் எழுதும்போது நீங்கள் ஏன் பாடல் எழுத மறுக்கிறீர்கள்?
பெரிய கவிஞர்கள்.. சின்னக் கவிஞர்கள் என்பதெல்லாம் பாடல் உலகில் பொய். பெருங்கடவுள்கள்.. சிறு கடவுள்கள் என்கிற சொல்லாடலில் உள்ள பிழைதான் மேற் சொன்ன சொல்லாடலிலும் உன்னதாகக் கருதுகிறேன்.
நேற்று ஆடி அடங்கும் வாழ்க்கையடா எழுதிய •ரதா சின்ன கவிஞரா?
அதனால் பெரிய கவிஞர்கள் எல்லாம் எழுதும்போது என்று சொல்லாதீர்கள்.
இப்படி வேண்டுமெனால் சொல்லலாம்.. என்னைவிட இளைய கவிஞர்களெல்லாம்,, என்னை விடவும் சிறப்பாக எழுதுவதற்கு எண்ணிக்கையில் அதிகமாக வந்திருக்கிறபோது.. நான் ஒருவன் மட்டும் விலகிக் கொள்வதில் என்ன இழப்பு ஏற்படப் போகிறது.

8) மெட்டுக்குப் பாட்டு எழுதுவது சரியா? அல்லது பாட்டுக்கு மெட்டு அமைப்பது சரியா?
ஏர் ஓட்டுகிற போது.. நடவு நடுகிறபோது என வயல்வெளி வாழ்க்கையில்.. அவர்களே மெட்டுகள் போட்டுக் கொண்டு.. அவர்களே பாடல்கள் பாடிக் கொள்கிற வாழ்வுமரபில் வந்தவர்கள் தாம் வைரமுத்துவாக இருந்தாலும் அறிவுமதியாக இருந்தாலும்.. மற்ற பாடலாசிரியர்களாக இருந்தாலும் எனவே.. எங்களுக்கு மெட்டுக்குப் பாட்டு எழுதும் ஒன்றுதான். மெட்டுள்ள சந்த ஒழுங்கில் பாடல்களாக எழுதிக் கொடுப்பதும் ஒன்றுதான்.

9) பெண் கவிஞர்கள் சினிமாவிற்கு அதிகம் ஏன் வரவில்லை? அவர்களுக்குள்ள பிரச்சனைகள் என்ன?
பெண்களுக்கான விடுதலை நேரமீது. தமிழ்கவிதை உலகில்.. இன்று மிகச்சிறந்த பெண் கவிஞர்களின் வெற்றி.. மகிழ்வூட்டுகிறது.
திரையுலகிலும்.. தங்கை தாமரையின் வெற்றி.. மெச்சத்தக்கது. தேன்மொழி .. இளம்பிறை.. கதிர்மொழி.. ஆண்டாள் பிரியதர்´னி என நீள்கிற இந்தப் பட்டியல் மற்ற மாநிலங்களில் எப்படியயன்று தெரியவில்லை. ஒவ்வொரு இயக்குநருக்கும் தம் படத்தில் ஒரு பெண் பாடலாசிரியருக்கு வாய்ப்புதருகிற.. அல்லது புதிய பெண் பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்துகிற பெரியர்வலி இருக்குமானால்.. இன்னும் வாய்ப்பாக இருக்கும். பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை கூடுகிறபோதும்.. மாற்றங்கள் ஏற்படலாம்.

10) சினிமா தவிர வேறு இலக்கிய பணிகளில் தற்போது ஈடுபாடு உண்டா?
‘தை’ என்கிற கவிதைகளுக்கென்றே ஓர் இலக்கிய இதழ் நடத்துகிறேன்.


11) கண்ணதாசன் சினிமாவில் பாட்டு எழுதிக் கொண்டே நூல்கள் எழுதினார். வைரமுத்துவும் அதையே பின்பற்றுகிறார். அதேபோல் உங்களுக்கு நூல்கள் எழுதும் எண்ணம் உண்டா? எம் மாதிரியான படைப்பை உருவாக்க உள்ளீர்கள்?
இது வரையில் ஏறக்குறைய 12 நூல்கள் எழுதியிருக்கிறேன். பாரதியாரைப் போல்.. பாவேந்தரைப்போல்.. ஒவ்வொரு நூலும் பாடுபொருளிலும்.. நடை வடிவிலும்.. வெவ்வெறு தன்மையில் விளையவேண்டும் என்பதில் விழிப்பாக இருக்கிறேன்.

12) தமிழ் இலக்கியம் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன? உலகத்தரம் வாய்ந்த இலக்கியத்தை படைக்க என்ன செய்ய வேண்டும்? முடியுமா?
தமிழ் இலக்கியத்தில்.. சங்ககாலப் புலவர்களைப் போல.. இந்தக் கவிஞர் சிறந்த கவிதை என்று சொல்ல முடிந்ததைப் போன்ற.. ஓர் மகிழ்ச்சி தரத்தக்க.. மக்கள் மயப்பட்ட.. அனைத்துத் தரப்பினரும்.. குறிப்பாகத் தலித்திய.. பெண்ணிய.. படைப்பாளிகளும் மிகச்சிறந்த மறுதலிக்கப்படமுடியாத படைப்புகளை வழங்குகிற காலமிது.

உலகத்தரம் வாய்ந்த இலக்கியத்தைப் படைக்க வேண்டுமானால் தமிழ்த் தரம் வாய்ந்த கருக்களைப் பாடுப்பொருள்களாகத் தேடிப்பிடிக்க வேண்டும்.
13) விருதுகள் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையயனில் அதற்கான காரணம்?
விசாரணைகளின் மீதுதான் நம்பிக்கையுள்ளது! பத்தரை ஆண்டுகள்.. கால் கடுக்க.. கால் கடுக்க.. நீதிமன்ற வளாகங்களில் நின்றிருக்கிறேன்… என் இனத்திற்காகவும்.. எம் மொழிக்காகவும்.. எழுதினேன் என்பதற்காகவும்.. பேசினேன் என்பதற்காகவும் இதனை மீறிய விருதை எனக்கு யாரால் கொடுக்க முடியும்?

ஆனாலும்.. முதல் தலைமுறையில்.. எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டு.. எழுத்தாளர்களாகவும் வருகிற தம்பி தங்கையர்கள் அடையாளப்படுவதற்கு இந்த விருதுகள்.. ஓரளவிற்குப் பயன்படுகின்றன. என்பதும் உண்மைதான்.

14) பாடல்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகரித்துள்ளதே?
இரண்டு மூன்று பேர் மட்டுமே வாழ்வதற்கு மிகப்பெரிய மாளிகைகளும்.. இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்வதற்கு ஒரே குடிசையுமாக உள்ள மோசமான சமூகத்தில்.. இரட்டை அர்த்தப் பாடல்கள் மட்டுமல்ல.. மூன்று.. நான்கு.. அர்த்த பாடல்கள் கூட உற்பத்தியாகும்.
ஒவ்வொரு கணவன் மனைவிக்கும்.. தங்கள் காமத்தை.. •தந்திரமாக அனுபவிக்கும் சூழலை ஏற்படுத்தித்தராதவரை. இத்தகைய கேவலங்கள் உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கும்.


15) நிறைய பாடலாசிரியர்களை, இயக்குனர்களை உருவாக்கியிருக்கிறீர்களே… எப்படி?
தன் மார்பில் ஊறிக்கனக்கும் தாய்ப்பாலைத் தன் குழந்தைக்கு மட்டுமே என்று வைத்திருக்கத் தெரியாத தாய்கள் எங்களூர்த் தாய்கள். நானும் ஒரு மார்பில் பால்குடித்து வளர்ந்தவனில்லை.
தாய்ப்பாலையே அடுத்த குழந்தைகளுக்கும் ஊட்டிப் பசியாற்றி மகிழ்கிற அந்தப் புன் செய்க் காட்டு வாழ்வில் பிறந்து வளர்ந்துதான் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மற்றும்.. என் கவி ஆசான் அப்துல் ரகுமான் அவர்கள்.. தமக்கான விலை மதிக்கப்படமுடியாத இரவுகளை.. வளரும் கவிஞர்களுக்காகத் தந்து உதவிய அனுபவங்களும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.




nandri; arivumathi.blogspot.com

Friday, December 3, 2010

பெயர்காரணம்

ஓட்டப்பிடாரம்
>>>>>>>>>>>>>>>>>>>

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதுடன் அந்நிய நாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியான பொருட்களைப் பயன்படுத்தாமல் சுதேசிக் கொள்கைக்காக 1906-ல் ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து, சுதேசிக் கப்பல் நிறுவனம் அமைத்து, கடல் வணிகம் செய்ததால் சிறைத் தண்டனை பெற்று, கப்பலோட்டிய தமிழன் என்ற சிறப்பு பெயர் பெற்ற வ.வ.சிதம்பரம் பிள்ளையைத் தெரியும் . அவர் பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் என்பதும் தெரியும். ஓட்டப்பிடாரத்துக்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பது தெரியுமா?
ஓட்டப்பிடாரம் என்னும் ஊர் படாரர், படாரன், பிடாரி, பிடரி, பிடாகை, ஓட்டன் என்கிற மிக அருமையான தமிழ்ப் பண்பாட்டுச் சொற்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்துப் பழங்காலக் கோவில்களில் மிகுதியான கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டும், இலக்கியச் சான்றுகளை ஏற்றும் ஓட்டப்பிடாரம் என்ற ஊர்ப் பெயர் விளக்கத்தைக் காண்போம்.
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னுள்ள காலத்து கல்வெட்டுக்கள் சமண முனிவர்களைப் படாரர் என்று குறிப்பிடுகின்றன. முந்தைய காலங்களில் சிவபெருமானைப் பிடாரன் என்றும் குறிப்பிட்டனர். பாம்பாட்டியைப் பாம்புப் பிடாரன் என்று திருநெல்வேலி பகுதி மக்கள் இன்றும் கூறுகிறார்கள். பாம்பை மாலையாக அணிந்த கடவுளே சிவபிடாரன் ஆவார்.
முப்பெரும் சக்தி அன்னைகளான சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி எனும் தெய்வங்களை திருநெல்வேலி பகுதி மக்கள், தங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப முப்பிடாரி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்கள். இப்பகுதியில் முப்பிடாரி, முப்பிடாத்தி, முப்புடாதி என்கிற பெயர்கள் ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுப்பெயராகி இன்றும் வழங்கி வருகிறது. அடக்கமாக வாழ வழியறியாது திரியும் பெண்களை 'அடங்காப் பிடாரி' என்று பழித்தும் உரைப்பார்கள்.
சைவமடத்து ஆதீனத் தலைவர்களைத் தம்பிரான் என்று அழைக்கிறார்கள். திருவாரூரில் தியாகேசப் பெருமானுக்கு மிக நெருங்கிய நண்பர் என ஒட்டி உறவாடியவரும் தேவாரத் திருப்பதிகங்களை ஓதியவருமான சுந்தரமூர்த்தி நாயனாரைத் 'தம்பிரான் தோழர்' என்பார்கள். கேரளாவில் தங்களுடைய எஜமானர், எஜமானியர்களை, இக்காலத்திலும் தம்புரான், தம்புராட்டி என்றுதான் கூறுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு என்கிற ஊரிலும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வன்னிக்கோனேந்தல், கரிவலம் வந்த நல்லூர் முதலிய ஊர்களிலும் தம்பிராட்டி அம்மன் கோவில்கள் மிகச் சிறப்புடன் இருந்து வருகின்றன.
மதுரை மாநகரின் ஒரு பகுதியாக உள்ள விராட்டிபத்து என்கிற ஊர் பிராட்டியார் பத்து என்ற பெயருடன் விளங்கி அதன் பின் மருவி விராட்டி பத்து ஆகியிருக்க வேண்டும். பத்து-பத்துக்காடு என்பது நல்ல நெல்விளையும் நன்செய் நிலங்களைக் குறிப்பதாகும். இதேபோல் மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே உள்ள கிடாரிப்பட்டி என்ற ஊரும் முன்பு பிடாரிப் பத்து-வாக இருந்து பின் பிடாரிப்பட்டி ஆகி தற்போது கிடாரிப்பட்டியாக மருவியிருக்க வேண்டும்.
சைவசமயக் கோவில்களில் தேவாரத் திருப்பதிகங்களைத் தமிழிசையோடு விண்ணப்பஞ் செய்து வரும் இசைவாணர்களைப் பிடாரர்கள் என இராசராச சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவிலிலுள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஆகவே பிடாரர், பிடாரி, பிடாரன் என்கிற பண்டைய தமிழ் சொற்களே தற்காலத்தில் பிரான், பிராட்டி என மரூஉ மொழியாக தசை என்பது சதை என்று ஆனது போல வழங்குகின்றன.
மனிதனுடைய தலையை உடம்போடு இணையச் செய்யும் பகுதி 'கழுத்து' ஆகும். கழுத்தின் முன் பகுதி 'தொண்டை' என்றும் பின் பகுதி 'பிடரி' என்றும் சொல்வோம். மனிதனுக்கு உயிர்ப்புத் தன்மை வழங்கும் தைராய்டு கிளாண்ட்சு தசைநார்களும், நிணநீர்ச் சுரபிகளும் அமைந்த பகுதியைப் பிடரி என்று அழைக்கிறோம். குதிரைக்குப் பிடரி மயிர் அழகு , காளை மாட்டிற்குப் பிடரி என்னும் திமில் அழகு, ஆகவே பிடரி என்னும் சொல்லும் பிடாரி என்று அழைக்கப் பெறும் ஆற்றல்-சக்தி என்ற பெண் தெய்வப் பெயரும் தமிழரிடையே இன்றும் வழங்கி வருகின்றன. பிடர், பீடு என்ற சொற்கள் உயிர்ப்பு,உயர்வு,பெருமை என்னும் பொருளைத் தரும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சைவ, வைணவக் கோவில்களில் திருப்பணிகள் செவ்வனே நடைபெற அக்கால மன்னர்களால் தேவதானமாக வழங்கப் பெற்ற ஊர்கள் நிறைய உண்டு. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் ஸ்ரீ பராங்குச நல்லூர்க் கீழ்ப்பிடாகை, ஸ்ரீ பராக்கிரம பாண்டியபுரம் கீழ்ப்பிடாகை, கீழ்ப்பிடாகை கஸ்பா வரதராஜபுரம் என்னும் ஊர்கள் இன்றும் உள்ளன. இவை போன்ற பெயருடைய பல ஊர்களைத் தமிழகம் முழுவதும் காண முடிகிறது. பிடாரன் கோவிலுக்கு உரிமையாக்கப் பெற்ற நிலங்கள் உள்ள ஊரானது பிடாகை என அழைக்கப் பெற்றது.
இராமயணக் காவியத் தலைவன் இராமன் லிங்க வடிவமுடைய சிவபெருமானை வணங்கி வழிபட்ட தலம் இராமேசுவரம் ஆகும். இராசராச சோழன் தஞ்சையில் பெருவுடையாருக்குப் பெருங்கோவில் வழிபட்ட இடம் இராசராசேசுவரம் ஆகும். இராஜா ஆட்சி செய்யும் நிலப் பகுதி இராஜ்ஜியம். அதுபோல சிவனாகிய ஈசுவரன் குடிகொண்ட கோவில் ஈசுவரம் எனப்படும். ஈசுவரன், ஈசுவரி, ஈசுவரம் என்பவை தமிழ் வடிவம் பெற்ற வடமொழிச் சொல்லாகும். இம்மூன்று பெயர்ச் சொற்களும் பொருநை (தாமிரபரணி) ஆற்றங்கரைப் பகுதி மக்களிடையே இன்றும் வழக்கத்தில் உள்ளன. ஆகவே பிடாரன் ஆகிய சிவபெருமான் குடிகொண்ட கோவில் இடம் பிடாரம் ஆகும்.
-இவை அனைத்தும் ஓட்டப்பிடாரம் என்னும் ஊரின் பின் பகுதிப் பெயாரான பிடாரம் என்பதற்கு விளக்கமாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பர் காலத்தில் வாழ்ந்த முதிர்ந்த பெரும்புலவர் ஒட்டக்கூத்தர். சோழப் பேரரசர்களான விக்கிரம சோழன் (கி.பி.1118-1133) ,இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி.1133-1150), இரண்டாம் இராசராசன் (கி.பி.1150-1163) ஆகிய மூன்று தலைமுறைச் சோழப் பேரரசர்களின் அவைக்களப் புலவராகச் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியவர். இம்மூன்று பேரரசர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு இவர் தனித்தனியே உலா இலக்கியங்கள் மூன்றை இயற்றியுள்ளார்.
வான்மீகி இராமாயணத்தின் இறுதிப் பகுதியாகத் தமிழில் அமைந்த உத்திர காண்டம் என்னும் காவியமும், தக்கயாகப்பரணி என்ற நூலும் இந்த ஒட்டக்கூத்தர் இயற்றியதாக அறியப்படுகிறது. இப்புலவருக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயர் ஏன் வந்தது? மூன்று தலைமுறை சோழப்பேரரசர்களிடமும் அவர்கள் குடும்பத்தினரிடமும் ஒட்டி, மிக நெருங்கிப் பழகியவர் என்பதால் 'ஒட்டர்' என்றும் முத்தமிழிலும் வல்லவராக இருந்ததால் 'கூத்தர்' என்றும் அழைக்கப் பெற்றார். ஒட்டக்கூத்தர் என்ற பட்டப் பெயருடன் புலவர் முற்றூட்டாகக் கூத்தங்குடி, கூத்தனூர் என்னும் நல்லூர்களையும் பெற்றார். தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் உள்ள கூத்தங்குடி என்ற சிற்றூரை இன்றும் காணலாம். தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் என்னும் ரயில் நிலையம் அருகில் கூத்தனூர் உள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனால் இப்புலவருக்கு முற்றூட்டாக இவ்வூர் வழங்கப் பெற்றதாகும். இக்கூத்தனூரின் ஆற்றங்கரையிலுள்ள கலைமகள் கோவிலில் உள்ள கல்வெட்டால் இது அறியப்படுகிறது.
உலகத்தோ ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்                     -குறள் 140-ஒழுக்கமுடைமை.
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறை நிலத்தொ(டு) ஒட்டல் அரிது.                              -குறள் 499-இடனறிதல்
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர். அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு                       -மூதுரை – செய் 17

-இம் மூன்று செய்யுட்களிலும் திருவள்ளுவரும் ஒளவையும் மிக நெருங்கிய நட்பு உரிமையை ,ஒட்ட, ஒட்டி என்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர். இதுபோலவே

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்தே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்               -குறள் 679-வினைசெயல் வகை
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப் படும்                   -குறள் 826-கூடாநட்பு
- இந்த இரு குறட்பாக்களிலும் 'ஒட்டார்' என்ற சொல்லால் பகைவரைத் திருவள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார்.
கம்பராமாயணம் யுத்த காண்டம்- வீடணன் அடைக்கலப் படலத்தில் சுக்கிரீவன் கூற்றாக உள்ள

'ஒட்டிய கனகமான் உருவம் ஆகிய சிட்டனும் '
யுத்த காண்டம்- கும்பகர்ணன் வதைப் படலத்தில் ஆசிரியர் கூற்றாக உள்ள
'ஒட்டிய நாயகன் வென்றிநாள் குறித்தொளிர் முளைகள்'
யுத்த காண்டம்- மீட்சிப் படலத்தில் பரதன் கூற்றாக உள்ள
'இவ்வுலகை உலைய ஒட்டான் அத்திருக்கும் கெடும்'
அயோத்தி நகர் நீங்கு படலத்தில் இலக்குவன் கூற்றாக உள்ள
'பெண்நாட்டம் ஒட்டேன் இனிப்பேர் உலகத்துள் என்றான்'
-என்கிற தொடர்களிலும் வேறுபல இடங்களிலும் ஒட்டிய, ஒட்ட, ஒட்டான், ஒட்டேன் என்னும் சொற்களைக் கம்பர் எடுத்தாளுகிறார். மேற்காணும் செய்யுட்களிலிருந்து 'ஒட்டன்' என்றால் மிக நெருங்கிய நண்பர் என்றும், 'ஒட்டார்', 'ஒட்டலன்' என்றால் பகைவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
அறிஞர் அண்ணா தமிழகத்தில் தம் எதிர்க்கட்சிக்காரர்களை அடையாளம் காட்டும்போது 'நம்முடன் ஒட்டும் உறவும் இல்லாதவர்' என்று அரசியல் மேடைகளில் கூறி வந்ததை இவ்விடத்தில் நாம் நினைவு கூறலாம்.
ஜெயங்கொண்டம் அருகில் ஒட்டக்கோவில் என்னும் பெயருடன் சிவன் கோவில் உள்ள ஒரு ஊர் உள்ளது. இதேபோல் வீரவாஞ்சி மணியாச்சிக்கு அருகில் உள்ள ஒரு ஊரின் பெயர் ஒட்டநத்தம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் ஒட்டன் சத்திரம். கடம்பூர் அருகேயுள்ள ஒரு ஊரின் பெயர் ஒட்டுடன்பட்டி. இந்த ஊர்ப் பெயர்களை இணைத்து நாம் சிந்திக்க வேண்டும்.
அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாற்றைப் பெரிய புராணம் கூறுகிறது. காஞ்சிபுரத்தில் மன்னன் கழற்சிங்கன் சிவபெருமானுக்கு கற்றளி ஒன்றை அமைத்தான். அதற்கு குடமுழுக்கு விழா எடுக்க ஏற்பாடு செய்து அதற்கான நாளும் நேரமும் குறித்தான். காஞ்சிக்கு சற்று தொலைவில் உள்ள சிற்றூரில் அடியார் ஒருவர் வாழ்ந்தார். அவர் தாமும் ஓர் கற்றளியைப் பெருமானுக்கு அமைக்க வேண்டுமென்று பேரவாக் கொண்டார். கையில் பொருளில்லாதவரான அடியாரால் என்ன செய்ய முடியும்? அதனால் தன் மனத்திலேயே சிவபெருமானுக்கு கற்றளி ஒன்றை அமைத்தார். குடமுழுக்குக்கு நாளும் நேரமும் தம் மனதிலேயே குறித்துக் கொண்டார். அரசன் கழற்சிங்கன், அடியார் குறித்த குடமுழுக்கு நாளும் நேரமும் ஒன்றாகிப் போனது. இதனால் அரசன் நடத்தும் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்றும் அடியார் அமைத்த கோவில் விழாவில் கலந்து கொள்ளப் போவதாகவும் கழற்சிங்கன் கனவில் தோன்றி சிவபெருமான் கூறினார். அரசன் அடியவரைப் போற்றினான். அவர் வாழ்ந்த இடத்திற்குத் திருநின்றவூர் என்றும் பெயர் சூட்டினான். சிவனருள் பெற்ற திருத்தொண்டரை பூசலார் நாயனர் என்று அழைத்துப் போற்றினான். பூசல் என்றால் மாறுபாடு. மனத்திலே கோவில் அமைத்த அடியார் ஏனைய மக்களினும் சிந்தனைத் திறனிலும் மாறுபட்டவர். பூசலுடையவர் என்று உலகத்தாரும் அறிந்து கொண்டனர். இவ்வாறு பூசலார் நாயனார் வரலாற்றைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
நாம் ஒட்டக்கூத்தர் என்ற புலவரின் பெயர் விளக்கத்துடன் பூசலார் நாயனார் வரலாற்றையும் இணைத்து 'ஒட்டன்' என்கிற சொற்பொருளுக்குரிய சிறப்பையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தென்பாண்டிச் சீமையின் கரிசல்மண் பூமியில் கங்கைவார் சடையும் பாம்பணியும் கொண்ட சிவபெருமான் தன்னுடன் ஒட்டி உறவாடிய சிவத்தொண்டரான பிடாரர் ஒருவர் அமைத்துள்ள திருக்கோவிலில் குடி கொண்டார். ஆகவே இவ்வூர் 'ஒட்டன்பிடாரம்' என்றிருந்து ஒட்டப்பிடாரமாகி பின்னால் அதிலிருந்து மருவி 'ஓட்டப்பிடாரம்' என மருவி வழங்கலாயிற்று. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, December 2, 2010

நாட்டுப்புறம்

பழமொழியின் விளக்கம்
முன்னுரை
இயற்கைக் கவிஞர்களாகிய பாமர மக்கள் தங்கள் அனுபவத்தைக் கற்பனைக் களஞ்சியமாகக் கொண்டு பாடப்படுபவை நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும். இன்பத்தைப் பாட்டால் பகிர்ந்து கொள்ளவும் சோர்வை போக்கிக் கொள்ளவும் வாய்மொழியாகத் தாலாட்டு, ஒப்பாரி, விடுகதை, விளையாட்டு பிசி, பழமொழி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். தொல்காப்பியர் வாய்மொழி. பண்ணத்தி என்று சுட்டுவது நாட்டுப்புறப் பாடல்களே எனலாம். மக்கள் தங்கள் வாழ்வில் பிசி, பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர். பழமொழி என்பது மக்களின் பண்பாட்டினை ஒட்டிய வாழ்வியல் முறைகளில் தொன்மையான வாக்கிய முதிர்வு பெற்ற சொற்களைப் பழமொழி என்பர். பழமொழியை மலையாளத்தில் "பழஞ்சொல்" என்றும் தெலுங்கில் "நாதுடி" என்றும் கன்னடத்தில் "நாண்ணுடி" என்று ஆங்கிலத்தில் Proverb என்றும் வழங்கப்படுகின்றது. பழமொழிகள் மூலம் மக்கள் வாழ்க்கை முறையினை அறிந்து கொள்ள முடிகின்றது. சாலை இளந்திரையன் பழமொழிகளைப் பற்றி "பழமொழிகளும் ஏனைய பாமரர் இலக்கியங்களும் அவைகளைப் படைத்து வழங்கி வந்த மக்களின் கருத்தோட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளன. எனவே மக்களின் சமுதாய இயல், அரசு இயல், நீதிஇயல், மற்றும் மத இயல், கோட்பாடுகளைப் பற்றிய ஆய்வுக்கு இவைகளை விடச் சிறந்த சாதனங்கள் வேறு இல்லை". (சமுதாய நோக்கில் பழமொழிகள்: 10) என்று குறிப்பிடுகின்றார். எனவே மக்களின் சமுகம், நீதி, அரசு, மதம் சார்ந்த வரலாற்றை அறிந்து கொள்ள பழமொழிகள் உறுதுணை புரிகின்றன என்பதை அறிய முடிகின்றது.

பழமொழியின் தோற்றம்

மனிதன் என்று சிந்தித்துப் பேசத் தொடங்கினானோ அன்றே பழமொழிகள் தோன்றி இருக்க வேண்டும். ஏனெனில் மக்களுடைய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்றி இயைந்து இருப்பதால் இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது என்பதை அறுதியிட இயலாததாக இருக்கிறது.
தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் சங்க இலக்கியத்தில் பழமொழிகளைக் குறித்த செய்திகள் வருகின்றன, அவற்றைக் குறிக்க பல்வேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. என்பதால் அதற்கு முன்பே பழமொழிகள் சிறப்புப்பெற்று இருந்திருக்க வேண்டும். நீதி நூல்களில் "பழமொழி நானூறு" என்ற நூலும் வெண்பாவால் இயற்றப்பட்டிருப்பது பழமொழிகளுக்குச் சிறப்பு சேர்ப்பதாக இருக்கின்றது. பின்னாளில் எழுந்த, தண்டலையார் சதகம், கோவிந்த சதகம், பழமொழி போதனை, பழமொழி போதம், பழமொழித் தாலாட்டு என்ற இலக்கியங்கள் எல்லாம் பழமொழியைப் பயன்படுத்தியும் பழமொழியின் பெயரால் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பழமொழிகளின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ச.சிவகாமி பழமொழிகள் பழங்காலத்தில் இருந்தே மக்களிடையே வழங்கி வருகின்றன. காலந்தோறும் அவற்றிற்கிடையே மாற்றங்கள் சூழல்களுக்கேற்ப ஏற்படுவதுடன் புதியனவும் தோன்றுகின்றன. வாழ்க்கை ஒழுங்கிற்கு எழுதாச் சட்டங்களாக நின்று வழங்கி வந்த பழமொழிகள் இலக்கிய உருவாக்கக் காலத்திற்கு முன்பே தோன்றின. (பன்முகக் பார்வையில் பழமொழிகள் ப.12) என்று உரைக்கின்றார். அதனால் பழமொழிகள் ஒவ்வொரு காலத்திலும் தோற்றம் பெற்று மக்களின் வாழ்க்கையோடு இயைந்தும் சிறந்தது நிலைத்தும் அல்லாதது மறைந்தும் போய் விடுகின்றன எனலாம். மனித வாழ்வின் ஒட்டு மொத்த பயன்பாட்டில் நல்லவற்றையும் தீயவற்றையும் சுட்ட வருவன பழமொழிகள். இவை அறிவின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் பண்பின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் தொழிலின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் வாழ்வியல் முறைகளின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் கொண்டே அந்தந்த நிகழ்ச்சிகளில் வல்லார் அந்தந்த நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டிச் சிலபல பழமொழிக€ளை தோற்றுவித்தனர். அவையே பழமொழிகளாயின (பழமொழியும் பண்பாடும் ப.5) என்று செந்துறை முத்து குறிப்பிடுகின்றார்.

பழமொழி - இலக்கணம்

பழமொழிக்குத் தொன்மையான ஒரு வரையறயை முதன் முதலில் வகுத்தவர் தொல்காப்பியர்: பழமொழியை "முது மொழி" என்று சுட்டியிருக்கின்றார். நுண்மை, சுருக்கம் ஒளி உடைமை, எளிமை, குறித்த பொருளை முடித்தல், ஏது நுதலுதல் ஆகிய இலக்கணம் வாய்க்கப் பெற்றுக் குறிப்பிட்ட பொருளைக் காரணத்துடன் உணர்த்துவது பழமொழி. இதனை,
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப. (தொல்- 177)
என்று பழமொழியின் அமைப்பை விளக்குகிறார். தமிழ்க் கோட்பாடு வரிசை 3 பழமொழி எப்படி இருக்க வேண்டும் என்பதை.
1. எளியோர் நாவில் வழங்கத்தக்கதாய் இருத்தல் வேண்டும்.
2. எதுகையிலோ மோனையிலோ அல்லது பிற வகையிலோ ஒரு வகை ஓசை நயம் இருத்தல் வேண்டும்.
3. கருத்தை நேரிடையாகக் குறிப்பிட வேண்டும்.
4. பழமொழி கூறும் கருத்து பலகாலும் அனுபவப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
5. உவமைகள் கண்ணாற் காணத்தக்கனவாக இருத்தல் வேண்டும்.
7. சொற்களை எடுத்து விட்டு வேறு சொல்லைப் பெய்து கொள்ளத் தக்க நெகிழ்ச்சி வேண்டும். (த.கோ.3.11-12)
என்று குறிப்பிடுகின்றது. அனுபவப்பட்ட மொழியாக இருப்பதோடு எல்லோராலும் பயன்படுத்தப்படும் சொல்லாக கருத்தை உணர்த்துவன பழமொழிகள் என்பதை அறியமுடிகின்றது. நன்னூல் நூலுக்குரிய பத்து அழகும் நூற்பாவுக்கு வகுத்துள்ள இலக்கணமும் பழமொழியின் இலக்கணத்திற்கு பொருந்துவனவாய் உள்ளன என்று வ.பெருமாள் குறிப்பிடுகின்றார்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

"நவின் றோர்க்கு இனிமை நன்மொழி புணர்தல்
ஓசையுடைமை ஆழமுடைத்தாதல்
முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்குதா தெடுத்த
தாகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே" (நன்-13)
சுருக்கமும், விளங்க வைத்தலும் நன்மொழி புணர்த்தலும் ஆழ்ந்த கருத்து உறைத்தலும் பழமொழிக்கும் உண்டு என்பதால் இவை பொருந்துகின்றது எனலாம். பழமொழிகளின் அமைப்பினை "ஒட்டு அல்லது உருவக அணியேற்று நின்று தொடர்புடைய கருத்தை உடனடியாக நெஞ்சில் எழச் செய்யும் முழுமையான வாக்கியமே பழமொழி என்பதோடு பழமொழி முறிவு பட்ட தொடராக இல்லாமல் முழுமையான வாக்கியமாகவே அமைய வேண்டும். முற்றுப் பெற்ற வாக்கியமாக இருத்தல் வேண்டும் என்றும். எந்தப் பழமொழியும் உரையாடல் முறையில் அமைவதில்லை. சுருக்கமும் ஒளியுடைமையும் பழமொழியின் முக்கியப் பண்புகள். எதுகை, மோனை, முரண், ஓசை நயம், வினா முதலிய உத்திகளைப் பழமொழி ஏற்றுவரும். கேள்வியாகப் பழமொழியை அமைப்பதே தமிழில் காணப்படும் பரவலான கருத்து. உவமைத் தொடர்களே சில நேரங்களில் பழமொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று (சமுதாய நோக்கில் பழமொழிகள்:15) சாலை இளந்திரையன் குறிப்பிடுகின்றார்
இதனால் சிறந்த கருத்தினைக் கொண்டதாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக, நீதியை உரைப்பதாக, எதுகை, மோனை பெற்று சுருங்கிய வடிவில் வருவன பழமொழிகள் எனலாம்.

பழமொழியின் வேறு பெயர்கள்

பழமொழி என்னும் சொல்லுக்கு இணைப்பொருண்மைக் கொண்ட சொற்களாக இலக்கியங்களும் நிகண்டுகளும் அறிஞர்களும் பல்வேறு பெயர்களைச் சுட்டிருக்கின்றனர்.
1. ஏது நுதலிய முதுமொழி என்ப-தொல் 177
2. எவ்வஞ் சூழாது விலங்கிய கொள்கைக் (காலை யன்ன சீர்சால் வாழ்மொழி (பதி,பா,21)
3. நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் தொன்றுபடு பழமொழியின் (அக 101)
4. பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி (அக.66)
5. மொழிமை மூதுறை முன்சொற் பழஞ்சோல முதுசொல் என்பர் பழமொழியுமாமே (பி.நி.22)
6. மூதுரைப் பெருங்கதைகளும் மொழிவார் - (கம் சூர் 102)
8. புலிதானே புறத்து அக குட்டி போட்டது என்ற
9. ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ (கம்.ஆர.102)
10. திருவள்ளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழி யோதியே யுணர்ந்து (திருப்புகழ்)
11. வேத முதல்வர் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றோ (சில ஊர் 46.49)
என்று இலக்கியங்கள் பழமொழியைச் சுட்டுகின்றன, வ.பெருமாள் பழமொழியை 33 சொற்களால் குறிப்பிடுகின்றார்.
1. பழமொழி, 2. தொன்னெறி மொழி, 3. முதுமொழி, 4. முதுசொல், 5. தொன்றுபடுகிளவி, 6. தொன்றுபடு பழமொழி, 7. வாய்மை, 8. அறம், 9. நெடுமொழி, 10. பல்லவையோர் சொல். 11. பண்டைப்பழமொழி, 12. சொலவு, 13. மூதுரை, 14. பழஞ்சொல், 15. மூத்தோர் சொல், 16. வழக்கு, 17. உரை, 18. பழையநெறியினவாய்வரும்சொல், 19. பழவார்த்தை, 20. உலகமொழி, 21. உபகதை, 22. சுலோகம், 23. சொலவடை, 24. வசனம், 25. எழுதாஇலக்கியம், 26. வாய்மொழி இலக்கியம், 27. எழுதாக் கிளவி, 28. கேள்வி, 29. சுருதி, 30. நீதிமொழி, 31. முதுமை, 32. மொழிமை, 33. முன்சொல்
என்று குறிப்பிடுகின்றார். இதனால் பழமொழியைச் சுட்ட பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்து இருப்பதே அறிய முடிகின்றது
பழமொழியின் தன்மை
வாழ்க்கை அனுபவமே பழமொழிகள். அவை என்றும் பொய்ப்பதில்லை, பழமொழியின் பொதுத்தன்மைகள் குறித்து அறிஞர்கள்,
1. ஆயிரம் நூற்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும் - லாவேட்டர்
2. பழமொழிகள் இருட்டில் வழிகாட்டும் தீவர்த்தி - பாஸ்ளியல் பழமொழி
3. சிறந்த பொருளை சுருங்கிய முறையில் உள்ளத்தில் பதியும் வண்ணம் கூறுவதே பழமொழியின் தன்மை-தாமஸ்கார் லைன் பழமொழி
4. வானம் இடிந்து விழுவதில்லை பழமொழி பொய்யவாதில்லை
5. பழமொழிக்கு உமியில்லை - இந்தியா
6. பால் புளிக்குமா? பழமொழி பொய்க்குமா? - அமெரிக்கா

என்று குறிப்பிடுவதால் பழமொழிகள் உண்மைகளை உரைப்பன என்பதை அறிய முடிகின்றது. பழமொழிகள் அனைத்திற்கும் பட்டறிவே அடிப்படையாக அமைகின்றது. அனுபவத்தின் குழந்தைகள் பழமொழிகள் என்று இங்கிலாந்தும் அனுபவத்தின் எதிரொலிகள் பழமொழிகள் என்று சுவிட்ஸர்லாந்து மொழியும் பழமொழியின் ஒருமித்த கருத்தாக அமைவதும் குறிப்பிடத்தக்கது.
பழமொழிகளுக்குப் பொருள் விளக்கங்களையும் மக்கள் தம் அனுபவத்தில் இருந்தே பெற்றுக் கொள்கின்றனர். பழமொழிகளைக் கூறுபவர் சூழலுக்கேற்ப பழமொழியைக் கேட்பவர் அச்சூழலை உணர்ந்து அதன் பொருளை அறிந்து கொள்கின்றனர். ஒரு மொழி பேசுபவரிடையே பல வட்டார வழக்கு மாறுபாடுகள் இருப்பதைப் போல் பழமொழிகளும் வழங்குவதில் வழக்கு மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்றைச் சிறப்பித்து மொழியும் பழமொழிகளுக்கு ஏற்ப அதே போன்று பிறிதொரு பழமொழியும் தோன்றுகிறது. இதனால் எது முந்தியது எதைப் பார்த்து எது பிறக்கிறது என்று சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
பயன்படும் சூழல்
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் தான் பழமொழிகளைப் பயன்படுத்துவர் என்று குறிப்பிட இயலாது. எல்லாச் சூழ்நிலைகளிலும் பழமொழியைப் பயன்படுத்துவர். அறிவுரை வழங்கும் போது தன்னிலை உணர்த்தும் பொழுது மதிப்பீடு செய்யும் பொழுது, தவறு செய்வோரை ஏசும் பொழுதும் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகள் பொருள் அடிப்படையிலும், தகுதி அடிப்படையிலும், சமுதாய அடிப்படையிலும், சமய அடிப்படையிலும், வட்டார அடிப்படையிலும், நில அடிப்படையிலும், செயல் அடிப்படையிலும், அளவு அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.
பழமொழிகள் வாழ்க்கைப் பயன் பாட்டிற்கு உதவுவதால், நன்மைத் தீமைகளைச் சுட்டுவதால் நீதிக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. மக்கள் தம் அனுபவத்தை என்றைக்கு வெளிப்படுத்த விரும்பினார்களோ அன்றே பழமொழிகள் தோற்றம் பெற்றன. பழமொழிகள் சுருக்கம், எளிமை கருத்து விளக்கம், எதுகை, மோனை, ஓசை நயம், வினா ஆகிய தன்மைகளைக் கொண்டு எதன் உதவியும் இன்றி தன் கருத்து வளத்தைக் கொண்டே நிலை பெறுகின்றது. மக்கள் தம் சிச்கல்களுக்கும் பேச்சுக்கும் ஓர் அழகைத் தருவதால் பழமொழிகளைக் காத்து வருகின்றனர். பயன்பாட்டில் அதிகம் இடம் பெறாத பழமொழிகள் நாளடைவில் மறைந்தும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் புதிய பழமொழிகள் தோன்றுகின்றன. காலத்திற்கும், பேச்சாளர்களும் தங்கள் கருத்து வளத்திற்குப் பழமொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
நன்றி
வேர்களைத் தேடி
கூடல்.காம்
*********************

கண்ணதாசன் கவிதைகளில் நாட்டுப்புறப்பாட்டின் தாக்கம்
..........................................................................................................................................


கண்ணதாசன் சங்க இலக்கியங்களையும் காப்பியங்களையும் ஆழ்ந்து பயின்று அவற்றின் சுவையில் திளைத்தவர் என்பதனை அவர்தம் கவிதைகளால் நன்கு அறியமுடிகிறது. இவ்வாறே ஏட்டுக்கு வராத கிராமத்து மக்களின் பழக்க வழக்கங்களைக் கூறும் வாய்மொழியை நேசித்துள்ளார். ஏட்டு இலக்கியத்தை நாட்டுப்புற மக்களுக்குக் கொண்டு சென்றவர் நாட்டுப்புற மக்களின் வாய்மொழி இலக்கியத்தை இலக்கியவாதிகளுக்குச் சொன்னவர். இவ்வாறு ஒரு புதிய மாற்றத்தை உண்டு செய்த பெருங்கவிஞராகவே விளங்கியவர் என்பதினை,
"பாவலரின் கவிதைக்கும்
பாமரனின் காதுக்கும்
பாலத்தைப் போட்டு வைத்தாய்
பண்டிதரின் முந்தியிலும்
பணக்காரர் தொந்தியிலும்
இருந்த தமிழ் மீட்டு வைத்தாய்"

கவிஞர் மு. மேத்தாவின் கூற்று மெய்ப்பிக்கும்.

தாலாட்டு:-

கவிஞரின் கவிதைகளில் நாட்டுப்புறக் பாடல்களுல் ஒன்றான தாலாட்டுப் பாடல்களின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகிறது. தாலாட்டுப் பாடல்கள் பெற்றோர் தவம், குழந்தை, அழகு, மாமன் சிர்வரிசை முதலியன குறிப்பிடத்தக்க சில கருத்துகளாகும் இவையின்றிக் காதல் பற்றியும் வீரம் பற்றியும் இயற்கை நிகழ்ச்சியான மழை பற்றியும், மதுவிலக்குப் பற்றியும் கலவரம் பற்றியும் தாலாட்டுப் பாடல்கள் கூறுகின்றன.
குழந்தையின் அழகு பற்றிய பாடல்:-
குழந்தையைத் தாலாட்டும் போது குழந்தையின் அழகினை வியந்து கூறும் தாலாட்டுப் பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. குழந்தையை முத்து என்றும் பவளம் என்றும் மணி என்றும் தாய் வியந்து பாராட்டும் பாடல்கள் பல காணப்படுகின்றன.
"முத்தத்தில் ஒரு முத்தோ முதிரவிளைந்த முத்தே
ஆணி பெருமுத்தோ ஐயாக்கள் ஆண்ட முத்தோ
முத்து முத்துக் கடலுகுள்ளே மூணாத்துப் பாய்ச்சலிலே
முக்குளித்து முத்தெடுக்கும் முத்துமகன் நித்திரையோ"

என்பது ஒன்று பாட்டினைக் கண்ணதாசன் தமதுதிரை இசைப் பாடலில்,
"ஆழக் கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய முத்து
எங்கள் ராசா கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு"

என்று வருணணைச் செய்திருக்கின்றார்.
ஒரு நாட்டுப்புறத் தாலாட்டுப் பாட்டில் பூ என்று குழந்தையின் முகத்தை வருணணை செய்கின்றாள் தாய் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூ வாக இருப்பதைக் கூறுகின்றார்
"கண்ணே கமலப்பூ கண்ணிரண்டும் தாமரைப்பூ
கண்மணியே ஏலப்பூ
சாதிரண்டும் பிச்சிப்பூ
மேனி மகிழம் பூ
மேற் புருவம் சண்பகப்பூ"

என்று தன் குழந்தையைப் பல்வேறு பூக்களாக வருணித்துத் தாலாட்டுகின்றாள். இப்பாடலினை அடியொற்றி
"சின்னச் சின்னக் கண்ணணுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டு தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா"

என்னும் பாடலைக் கவிஞர் பாடியுள்ளார்.
மாமன் சிர் தாலாட்டில்
தாலாட்டுப் பாடல்களின் மாமனை மையப்படுத்தி மாமனுடைய சமூகப் பொறுப்புகளை பற்றிக் கூறும் பாடல்களை ஒரு தனிவகையாக பிரிக்கலாம். அந்த அளவிற்கு மாமன் பற்றி தாலாட்டுப் பாடல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மாமன் என்பவர் செல்வராகவோ ஏழையாகவோ எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் சடங்கு வழியில் நின்று நிறைவேற்றும் பொறுப்புகள் மாறாதவகைளாக உள்ளன. சகோதரியின் குழந்தைக்கு மாமன் செய்யும் சிர் பற்றி
"தங்கத்தாலே தாலி என் கண்ணே
உனக்குத் தருவாரோ உன் மாமன்
பொன்னாலே மங்கலமாம் - என் கண்ணே
உனக்குப் போடுவார் உன் மாமன்"

வறுமை உணர்த்தும் தாலாட்டு:-
தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் குழந்தையிடம் கூறுவதாகப் பாடல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. வறுமையின் கொடுமையினையும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தினையும் தாலாட்டுப் பாடல்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
"ஏழைக் குடிசையிலே
ஏன் பிறந்தாய் செல்வமுத்தே
எத்தனையோ சிமாட்டி
ஏங்கித் தவங்கிடக்க
என் வயிறு தேடி
ஏன் பிறந்தாய் செல்வமுத்தே"

என்பது தான் வந்த நாட்டுப்புறப் பாடல் இப்பாட்டினை கண்ணதாசன் தனது கவிதையில்
"ஏன் பிறந்தாய் மகனே - ஏன் பிறந்தாயோ
இல்லையொரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே"

என்று வறுமையினை படம்பிடித்துக் காட்டுகின்றார். வறுமையோடு தத்துவத்தையும் கூறுகின்ற கவிஞர். பிறந்த மகனை ஏன் பிறந்தாய் என்று கூறுமளவுக்கு மனம் வெறுப்பதற்குக் காரணமான வறுமை காட்டுகின்றார்.
பணம் இருக்கும் மனிதனுக்கு உலகம் எல்லாம் சொந்தம். பணமில்லா மனிதனுக்குச் சொந்தம் எல்லாம் துன்பம் என்பார் கண்ணதாசன். இக்கருத்தினை வலியுறுத்தும் முகமாக ஒரு தாலாட்டுப் பாடல்.
"கண்ணுக்கு இனியவளே கற்கண்டுச் சொல்லழகா
மாமனார் வந்திடுவார் மார்மேலே சிராட்ட
பொன்னா சைக்குடைமாமன் புறப்பட்டு வந்திடுவான்
பாட்டியார் வந்திடுவார் அடுக்களைச் சோறூட்ட
எல்லோரும் வந்திடுவார் ஆன பணம் உண்டானால்
உன்னைப் போல் செல்வனை நான் உலகெங்கும் கண்டதில்லை
என்னைப் போல் ஏழையை நீ எங்கனாச்சும் கண்டதுண்டா"

இப்பாடலின் தாக்கமாக,
செல்வர்கள் வீட்டில் சிராட்டும் பிள்ளைக்கு
பொன் வண்ணக் கிண்ணத்தில பால்கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவிரி நீராட்டு
கண்ணுறங்கு கண்ணுறங்கு"

என்ற கண்ணதாசன் தனது கவிதையில் ஏழைக்கு பிறந்த குழந்தை செல்வ செல்வாக்கு இல்லை என்பதைக் குறிப்பிடுகின்றார்.

காதற் பாடல்கள்:-
நாட்டுப்புறப் பாடல்களில் காதற் பற்றியப் பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றது. காதல் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்ற பதிப்பாகவே இருக்கின்றன. அந்த அளவுக்கு மனதை கவர்ந்திழுக்கும் கருத்துச் செறிவும் உணர்ச்சியும் வெளிப்படுகின்றன.
வட்ட வட்டப் பாறையிலே
வரகரிசி தீட்டையிலே
ஆர் கொடுத்த சாயச்சிலை
ஆல வட்டம் போடுதடி

என்ற தெம்மாங்குப் பாட்டினை மனதில் நிலை நிறுத்திய கண்ணதாசன் தனது பாடலில்
வட்ட வட்டப் பாறையிலே
வந்து நிற்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி
ஆலவட்டம் போடுதடி"

என்று தமது கவிதையில் நாட்டுப்புறப்பாட்டின் தாக்கத்தினை அறியலாம்.
காதலரின் மேன்மையை வியந்து வருணித்துக் காதலி பாடும் நாட்டுப்புறப் பாடல் ஒன்றில்
"ஆல மரத்துக்கிளி
அசாரம் பேசுங்கிளி
நான் வளர்த்த பச்சைக்கிளி
நாளை வரும் இந்த வழி"

இவ்வாறு கூறுகின்றாள்.
இப்பாடலின் தாக்கம் கண்ணதாசனுக்கு மனதில் நிலைப் பெற்றதனால் அதனை சென்றதும் கூற்றாக,
"பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்துப் பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக்கிளி
நாளை வரும் கச்சேரிக்கு

என்று திரைக்குத் தகுந்தாற்போல பாட்டு இயற்றியுள்ளார் கவிஞர்.
ஒப்பாரிப் பாடல் தாக்கம்:-
ஒருவர் இறந்தபின்பு அவரின் இயல்புகளைக் கூறி அழுதல் ஒப்பாரி ஆகும். ஒப்பாரி என்பது இறங்கற்பா, கையறுநிலைப் பாடல் போன்றப் பெயர்களில் அழைக்கப்படும்.
"தங்க லைட் டெரியும்
தனிக்காந்தம் நிண்ணெரியும் - இப்போ
தங்க லைட்டுமில்லை - எனக்கு
தனிகாந்தம் பக்கமில்லை
பொன்னா பகுத்திருந்தா - எனக்கு
பொன்னு லைட்டெரியும்
புதுக் காந்தம் நின்னெரியும் - இப்ப
பொன்னு லைட்டுமில்லே
புதுக் காந்தம் பக்கமில்லை"

இப்பாடலொடு திரையிசைப் பாடல் ஒப்பிட்டு நோக்க உகந்ததாக அமைந்துள்ளது.
"அன்றோரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே"

என்று குறிப்பிடுவார். இப்பாடலிலும் வருத்தமே மிகுந்திருக்கின்றது.
கண்ணதாசன் பாடல்களில் நாட்டுப்புறப் பாடல்களுள் ஒன்றான தாலாட்டில் குழந்தையின் அழகு மாமன்சிர், வறுமையின் நிலை போன்றவைகளும் காதற் பாட்டு, ஒப்பாரிப்பாட்டு போன்ற செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. நாட்டுப் புறப்பாட்டின் தாக்கம் மிகுதியாக இடம் பெற்றுள்ளது.

நன்றி: வேர்களைத்தேடி

***************************
***************************

வட்டார வழக்கும் எழுத்தாளர்களும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



மொழியை மக்கள் உருமாற்றம் செய்கிறார்கள். இவ்வுலகின் பெரிய அறிஞர்கள் அவற்றை வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறார்கள். மக்களின் மொழிப் பிரயோகத்திற்கு நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.
- ழாக் ப்ரெவர்
ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட கால வாழ்க்கை முறையை ஆவணமாக, இலக்கியமாக, வரலாறாக, கலையாக உருவாக்குபவன் எழுத்தாளன். மொழியியல் சார்ந்த விதிமுறைகளை, கொள்கைகளை, கோட்பாடுகளை, வரையறைகளை, அளவுகோல்களை அவன் உருவாக்குவதில்லை என்றாலும் இவை அனைத்தும் உருவாவதற்கான காரணிகளை உருவாக்குவதில் எழுத்தாளனின் பங்கு மிக முக்கியமானது.
மொழி குறித்து, அதன் கூறுகள், அதன் பன்முகத் தன்மை, அதன் பயன்பாட்டுப் பரப்பு குறித்துப் பேசுவதற்கு நுணுக்கமான பார்வை தேவை. காரணம், மாறிக்கொண்டேயிருப்பது, அதே நேரத்தில் வளர்ந்து கொண்டேயிருப்பது மொழி. மொழி தனித்து இயங்கக் கூடிய ஒன்றல்ல. அது குறிப்பிட்ட இனக்குழுவின் வாழ்க்கைமுறை சார்ந்து, நிலம் சார்ந்து, கலைகள், தொழில்கள், கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகள் சார்ந்து உருவாவது. இந்த மொத்தக் கூறுகளும் சேர்ந்ததுதான் மொழி. இவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது.
மொழி என்பது பேசுவதற்கானது, கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கானது. ஒரு பொருளை, இடத்தை உச்சரிப்பதற்கானது, புரிந்துகொள்வதற்கானது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் ஒட்டுமொத்த வாழ்வின் சாராம்சம். ஒரு வாழ்க்கைமுறைதான் மொழியை உருவாக்குகிறது. மொழி ஒருபோதும் ஒரு வாழ்க்கைமுறையை உருவாக்குவதில்லை.
ஒரு மொழியில் ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறது என்றால் அது ஒரு தனிமனித வாழ்க்கையை, ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே விவரிப்பதாகக் கொள்ள முடியாது. விரிந்த பொருளில் ஒரு படைப்பு குறிப்பிட்ட சமூகத்தின் ஒரு காலத்திய வாழ்க்கை முறையை விவரிப்பதாகவே கொள்ள முடியும். அப்படி விவரிக்கிற ஒரு படைப்பைத்தான் சிறந்த இலக்கியப் படைப்பு என்கிறோம். சிறந்த படைப்பிலக்கியத்தின் மூலம் ஒரு சமூகத்தை, அதன் வாழ்க்கையை, வரலாற்றை அறிய முடியும். அப்படி அறிந்து கொள்வதற்கான வாசல்தான் மொழி.
தமிழ் மொழியை, அதன் கூறுகளை, அலகுகளை, பயன்பாட்டுப் பரப்பை, பரிமாணங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது - எழுத்தாளன் என்ற வகையில் எனக்கு எளிதாக இல்லை. குறிப்பாக, தமிழ் மொழியின் வழக்குகளைப் புரிந்துகொள்வதில், தற்காலத் தமிழைக் கையாள்வதில், மொழியில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது எளிய காரியம் அல்ல. அதிலும் வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி எழுதும்போது வரக்கூடிய பிரச்சினைகள் கொஞ்சமல்ல. எனக்கு மட்டுமல்ல, மொழியைப் புரிந்துகொண்டு எழுதுகிற எழுத்தாளர்களுக்கு - மொழியில் சிக்கல்கள் பெருகியபடியே இருக்கின்றன - இருக்கும் என்பதுதான் உண்மை.
தமிழ் மொழியில் வட்டார வழக்குகள் குறித்த பேச்சு வெகு காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு, விவாதத்தில் பல படிநிலைகளைக் கடந்து செயல்பாட்டளவில் பல வரையறைகளுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நாம் இப்போதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறோம். அதிகப்படியான போக்குவரத்து வசதி, தொழிற்சாலைகள், நகரங்களை நோக்கிய குடிபெயர்வு, அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், உலகமயமாக்கம் என்று எல்லாமும் சேர்ந்து தமிழ் வாழ்க்கைமுறையை முற்றிலுமாகக் குலைத்துப் போட்டுவிட்ட நிலையில் வட்டார வழக்குகள் குறித்துப் பேசுவது சற்று வேடிக்கையானதுதான். தற்போதைய தமிழ் வாழ்க்கைமுறையில் வட்டாரம் என்பதற்கும் வட்டார வழக்குகள் என்பதற்கும் அர்த்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
தமிழ் மொழி காலம் காலமாக ஏதாவது ஒரு வழியில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிக்கொண்டே வந்திருக்கிறது. போர்த் தொடுப்புகள், வடமொழி ஆக்கிரமிப்பு, சமஸ்கிருதத்தின் தாக்கம், மிஷனரிகளின் வருகை, பிரிட்டிஷ் நிர்வாக முறை, ஊடகங்களின் மொழி என்று நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் தாக்குதலில் தமிழ் மொழி இழந்ததும் அளப்பரிய பெற்றதும் அளப்பரியது.
உலகெங்கும் சிறுசிறு இனக்குழுக்கள் சர்வதேசக் கலாச்சார வன்முறையால், அச்சு, காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் தங்கள் பண்பாட்டு அடையாளங்களை வேகமாக இழந்துவருகின்றன. தமிழ் மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல. பல நூற்றாண்டு காலக் கிராம ஒழுங்குகள், நீதி நியமங்கள், நடைமுறைகள், அமைப்புகள் ஊடகங்களால் கொந்தளிப்பை ஒத்த தாக்குதலுக்குட்பட்டு நிலைகுலைந்துள்ள நிலையில் நாம் வட்டார வழக்குகள் குறித்துப் பேசுகிறோம்.
வழக்குச் சொற்களில் உயர்ந்தது தாழ்ந்தது என்பது இருக்க முடியாது. இல்லை. ஆனால் உயர் வழக்கு, புலவர் தமிழ், பாமரர் வழக்கு, சாதி வழக்கு, இழிசனர் வழக்கு, கொச்சைத் தமிழ் என்று பல ரகமாகக் காலம் காலமாகப் பிரித்து வைத்திருக்கிறோம். இப் பிரிவினை மொழி வளர்ச்சிக்கு உதவாது. உலகத்தில் இன்று செழுமையான மொழிகள் என்று சொல்லப்படும் எல்லா மொழிகளுமே ஒரு காலத்தில் வட்டார மொழிகளாக, பேச்சு மொழிகளாகத்தான் இருந்துள்ளன என்பது வரலாறு. ஒரு மொழியின் சொல்வளத்தைப் பெருக்குவதற்கு வட்டார வழக்குகள், பொதுப் பேச்சு வழக்குகள் பெரிய பங்களிப்பைச் செய்ய முடியும். படைப்பு மொழி, தனது உயிர்ப்பைப் பேச்சு - வட்டார வழக்கிலிருந்துதான் பெறுகிறது.
தமிழ் மொழியில் கிராமப்புற, உழைக்கிற மக்களின் மொழியை "நீச பாஷை" என்று புறக்கணித்த நிலை இருந்துள்ளது. இதனால் மொழியின் செழுமையான ஒரு பகுதி தமிழ் மொழியில் சேராமலேயே போய்விட்டது. கிராமப்புற நிகழ்த்துக் கலைகளின் வழக்குகள், கதைகள், பாடல்கள், சடங்குகள், விளையாட்டுகள், விடு கதைகள், பழமொழிகள் போன்றவற்றோடு தொடர்புடைய பல வழக்குகளை இழந்துவிட்டு நிற்கிறது தற்காலத் தமிழ். வட்டார வழக்கு பொது வழக்காக, எழுத்து வழக்காக மாறும். அப்படி மாறும்போது மொழிக்குப் பெரிய பலம் சேரும். வட்டார வழக்கின் பலத்தை இன்னும் அறியாதவர்களாகவே நாம் இருக்கிறோம்.

இயல்பான தமிழில் எழுதுகிற மனோபாவம் நம்மிடம் இல்லை. மேடைப் பேச்சுத் தமிழையே எழுத்துத் தமிழாகப் பாவிக்கிற மனோபாவத்தைத் திராவிட இயக்கங்கள் வலுவாக வேர் ஊன்றச் செய்துவிட்டன. அந்த மனோபாவத்திலிருந்து தமிழர்கள் இன்னும் மீளவே இல்லை. மொழி என்பது ஒரு இனக் குழுவின் அடையாளம். நாம் நம் அடையாளத்தை, அதற்குரிய நிஜமான பொருளில் புரிந்துகொள்ளாதது மட்டுமல்ல, அதை வேகமாக இழந்துவருகிறோம் என்பதுகூட நமக்கு உறைக்கவில்லை.
குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் வாழும் மக்கள் பயன்படுத்தும் மொழியில் சிலபல வழக்குகள் பிற நிலப்பரப்பிற்குள் வாழும் மக்கள் அறியாத வழக்குகளாக இருப்பவற்றைக் குறிப்பிட்ட நிலப்பரப்பின் வழக்குச் சொற்கள் என்று வரையறை செய்யலாம். இப்படிப் பல நிலப்பகுதிக்குள் தனித்தனியாக உச்சரிக்கப்படுகிற வழக்குகளையே அந்தந்த நிலப்பகுதிக்குரிய வழக்குச் சொற்கள் என்று வகைப்படுத்தலாம். இந்த வரையறை ஒருபோதும் முழுமையானதாக இருக்க முடியாது. காரணம். நிலைத்த, நீடித்த சொல் வழக்கு என்று எந்த நிலப்பகுதியிலும் இருக்காது இருக்கவும் முடியாது. மொழி காலந்தோறும் மாறக்கூடியதாக இருக்கிறது. மாறக்கூடிய, மாற்றம் கொள்ளக்கூடியதாக இருக்கிற நிலையில் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் நின்றுதான் வரையறுக்க முடியும்.
கிராமத்தையும் விவசாயத்தையுமே அடிப்படையாகக் கொண்ட நாட்டில் இவற்றை மையப்படுத்தித்தான் இலக்கியங்கள் உருவாகியிருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருக்குமாயின் பெருமளவில் கிராம வாழ்க்கையும் மொழியும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருக்கும். அது தமிழ் மண்ணில் காலம் கடந்துதான் நடந்தது. அதுகூட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எழுத வந்த பிறகுதான் நிகழ்ந்தது. அதுவும் 1980க்குப் பிறகு. இலக்கியத்தில் கிராமப்புற வாழ்வையும் மொழியையும் அதன் தன்மை மாறாமல் ஓரளவு பதிவுசெய்தவர்கள் என்று கி. ராஜநாராயணன், ஆர். சண்முகசுந்தரம், பூமணி போன்றவர்களை முன்னோடிகளாகச் சொல்லலாம். இவர்களுடைய பாணியைப் பின்பற்றி நிறையப் பேர் ஒரு இயக்கமாகவே செயல்பட்டார்கள். இவர்களும் சரி, இவர்களுக்குப் பினனால் வந்தவர்களும் சரி, வட்டார வழக்கின் ஜீவனை, அதன் பன்முகத் தன்மையை, பண்பாட்டுப் பரப்பைப் புரிந்துகொண்டு எழுதினார்கள், எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் மனத்தில் பட்டதை எல்லாம் எழுதினார்கள் என்று சொல்லலாம்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்ததாலேயே ஒரு எழுத்தாளன் குறிப்பிட்ட வட்டார வழக்கின் ஜீவனைக் கண்டுபிடித்து எழுதுவான் என்று சொல்ல முடியாது. கிராமத்தில் பிறந்து வளர்ந்ததாலேயே ஒருவர் எழுதுவதெல்லாம் வட்டார வழக்கு எழுத்து இலக்கியம் என்று சொல்ல முடியாது. ஒருவர் அனுபவ பலத்தில் எழுதும்போது தன்னியல்பாக வட்டார வழக்குகள் சிறப்பாக அமைந்து ஒரு படைப்பை மதிப்பு மிக்கதாக மாற்றிவிடலாம். தன்னியல்பாக அமைகிற மொழி முக்கியமானது. அதோடு வாசிப்பின் மூலம் பெறுகிற மொழியும் முக்கியமானது. இரண்டு மொழியையும் மிகவும் சரியாகப் பயன்படுத்துவதற்கு எழுத்தாளனுக்குத் தேர்ந்த பயிற்சி வேண்டும். பிறரைக் காட்டிலும் எழுத்தாளனுக்கு மொழியில் தெளிவும் பயிற்சியும் இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு பாத்திரத்தை உருவாக்குவதுதான் எழுத்தாளனின் வேலை. அதற்குரிய மொழியைத் தீர்மானிப்பதில்லை. குறிப்பிட்ட பாத்திரம் அதற்கான மொழியைத்தானாகவே உருவாக்கிக்கொள்ளும். கவிதைக்கான மொழியும் புனைகதைக்கான மொழியும் வெவ் வேறானவை. சொற்களின் மீதும் மொழியின் மீதும் கவர்ச்சியும் மோகமும் கொண்டவனாக எழுத்தாளன் இருக்கக் கூடாது. மொழியைக் கவர்ச்சியுடன் பயன்படுத்துவதைவிட அறிவுபூர்வமாகப் பயன்படுத்துவதே மொழி வளர்ச்சிக்கு உதவக்கூடியது. வடிவ ஒழுங்கும் மொழி நேர்த்தியும் மட்டுமே ஒரு படைப்பை மதிப்புமிக்கதாக மாற்றிவிட மாட்டா.
பொது எழுத்து மொழியைப் பயன்படுத்துபவர்களைக் காட்டிலும் வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி எழுதுகிறவர்கள் கூடுதல் அக்கறையுடன் மொழியின் வலுவைப் புரிந்துகொண்டு எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வட்டார வழக்குகள் நிறைந்த படைப்பைப் படிப்பதில் பிரச்சினைகள் இருக்கும் என்று நான் நம்பவில்லை. அப்படி இருப்பின் அவை சிறிய பிரச்சினைகளாகவே இருக்கும்.
தமிழில் வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி எழுதுபவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றனர். கிராமத்தில் பிறந்து, வளர்ந்து தொழில் சார்ந்து பெரு நகரங்களில் நிரந்தரமாகக் குடியேறி, கிராமத்தோடு தொடர்பு விட்டுப்போனவர்கள், தங்களுடைய ஞாபகங்களை மறுஉருவாக்கம் செய்து எழுதுகிறவர்கள். இவர்களுடைய வட்டார வழக்கு - எழுத்து மொழி, பொதுப் பேச்சுமொழி, அரைகுறை வட்டார வழக்கு மூன்றும் கலந்து - புது வழக்காக இருக்கிறது. மற்றொரு வகையினர் நிரந்தரமாக, குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வார்த்தைகளுக்கு உயிர் உண்டு என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. கச்சிதத்தன்மை பற்றி அக்கறையில்லாமல், தங்களுக்குத் தெரிந்த வழக்குகளை எல்லாம் ஒரு மோஸ்தராகப் பதிவுசெய்கிறவர்கள். இந்த இரண்டு வகையினர் எழுதும் வட்டார வழக்குகளைக் கொண்டு வட்டார வழக்குகள் குறித்த எந்த அலகையும் உருவாக்க முடியாது. படைப்பு என்பது மொழி சம்பந்தப்பட்டது. ஒரு சிறந்த படைப்பில் மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள மட்டுமல்ல, உருவாக்கிக்கொள்ளவும் செய்கிறது.
வட்டாரம் சார்ந்த வழக்குகளைப் பயன்படுத்தும்போது சிக்கலில்லை என்று சொல்ல முடியாது. அய்யர் என்றால் பிராமணர் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. காலனியில் ஒரு அய்யர் இருக்கிறார், அவர் பிராமணர் அல்ல, வள்ளுவப் பண்டாரம். இவர்தான் காலனி வாழ் மக்களுக்குத் திருமணம், சாவு, ஜோசியம் பார்த்தல் போன்ற சடங்குகளைச் செய்பவர். இவரை அய்யர் என்றுதான் காலனி வாழ் மக்கள் அழைப்பார்கள். பிற வகுப்பினர் இவரைப் "பண்டாரம்" என்றுதான் அழைப்பார்கள். இந்த அய்யரை நாவலில் பதிவுசெய்யும்போது (கோவேறு கழுதைகள், 199ள் செடல், 2006) கூடுதலாக ஒரு பத்தி எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே மாதிரி - ஆறுமுகம் நாவல் (1999) மொழிபெயர்க்கப்பட்டபோது - "சாண்டே குடிச்சவன" என்பதை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை. சாண்டு என்றால் பெண்களின் சிறுநீரைக் குறிப்பது. மொழி பெயர்ப்பாளர் சாண்டு என்றால் பெண்களின் மாதவிடாய், அழுக்கு, கழிவு என்பதாகத் தமிழ் லெக்சிக்கனில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். கோவேறு கழுதைகள் நாவலில் (1994) "என்னோட லிபி" அவ்வளவுதான் என்று ஆரோக்கியம் என்ற பாத்திரம் சொல்லும். லிபி என்பது சமஸ்கிருதச் சொல். இச்சொல் எப்படி ஆரோக்கியம் என்ற பாத்திரத்திற்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியவில்லை. நாவலுக்குள் எப்படி அச்சொல் வந்தது என்பதும் எனக்குத் தெரியவில்லை. இச்சொல் தன்னியல்பாக வந்து விழுந்துள்ளது. இது சமஸ்கிருதச் சொல் என்று சொல்ல வேண்டுமா, வட்டாரச் சொல் என்று சொல்ல முடியுமா?
என் விருப்பத்திற்கேற்ப மொழியைப் பாத்திரத்தின் மொழியாக மாற்றுவதில்லை. ஒரு பாத்திரத்தின் மீதோ அதன் மொழியின் மீதோ நான் குறுக்கீடு செய்வதில்லை. மொழியால் வாசகரை ஈர்க்க நினைப்பது, பிரமிக்கவைப்பது என்பது படைப்பை ஊனப்படுத்தும்.
வட்டார வழக்குகள் குறித்துப் பேசுகிற நமக்கு எது எழுத்து வழக்கு, எது பேச்சு வழக்கு, எது வட்டார வழக்கு என்ற தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்குமான இடைவெளி எது, பேச்சு வழக்குக்கும் வட்டார வழக்குக்குமான இடைவெளி எது, அவற்றை எப்படி இனம் காண்பது, எந்த அலகால் வரையறை செய்வது? தீர்மானிப்பது? இதற்கு நடைமுறை சார்ந்த அணுகு முறை என்ன, விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை என்ன என்பது குறித்த தெளிவோ அக்கறையோ எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல மொழியியலாளர்களுக்கு, கல்வித் துறையைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமல்ல, சமூகத்திற்கேகூட இருப்பதாகத் தெரியவில்லை. இதில் தெளிவும் அறிவும் ஏற்படாதவரையில் மொழியின் ஒரு பிரிவான வட்டார வழக்குக் குறித்து நாம் எந்த அலகுகளையும் உருவாக்க முடியாது. அதுவரை எழுத்து மொழியையும் பேச்சு மொழியையும் வட்டார வழக்கையும் ஒரே வாக்கியத்தில் நம் தமிழ் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். எழுத்தாளர்கள் மொழியியல் குறித்து அக்கறைப்படுவதில்€ல் மொழியியலாளர்கள் இலக்கியம் குறித்துக் கவலைப்படுவதில்லை. இந்தத் தனித்தனித் தீவுகள் ஒன்றிணையும்போது மட்டுமே மொழி குறித்து, வட்டார வழக்குகள் குறித்துப் பேசுவதில் அர்த்தம் இருக்க முடியும்.
"கைமுதல், கைப்பாவை, கையாலாகாதவன், கைநாட்டு, கைமாத்து, கைக்கிளி, கையை விரிச்சிட்டான், அவனுக்குக் கை நீளம்" ஆகிய சொற்களைக் கழனியூரன் என்பவர் வட்டார வழக்குச் சொற்களாகப் பட்டியலிடுகிறார் (குமரிக்கடல் - ஜூன் 2006 - பக்கம் 21, 22). இச்சொற்கள் எந்த வட்டாரத்திற்குரியவை என்பதைக்கூடக் கழனியூரன் குறிப்பிடவில்லை. இதே மாதிரி அ.கா. பெருமாள் தொகுத்த நாஞ்சில் நாட்டுச் சொல்லகராதியில் (2004) நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குகளாக "நக்கல், நடவு, சுண்டைக் காய், சுமைதாங்கி, குட்டிக்கரணம், கனகச்சிதம், அடம், அட்டூழியம், அடிமாடு" என்று பட்டியலிடுகிறார். அ.கா. பெருமாள் தொகுத்துள்ள சொல்லகராதியில் தமிழகம் எங்கும் உள்ள எழுத்து வழக்கு, பேச்சு வழக்குச் சொற்களையே அவர் தொகுத்துள்ளார். நம்முடைய வட்டார வழக்குச் சொல்லகராதிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது.
2000ஆம் ஆண்டு இந்திய அரசின் பண்பாட்டுத் துறை எனக்கு இளநிலை ஆய்வு நல்கை ஒன்றை வழங்கியது. இளநிலை ஆய்வு நல்கைக்காக நான் தொகுத்த "தலித்" சொல்லகராதி பாதியிலேயே நின்றுவிட்டது. காரணம் தற்போதைய நவீன உலகமயமாக்கல் வாழ்க்கை முறையில் சாதி ரீதியான ஒரு வழக்குச் சொல்லகராதியை உருவாக்குவது சாத்தியமில்லை என்பது என் அனுபவத்தில் தெரிந்தது. இது வட்டார வழக்குச் சொல்லகராதிக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். சோதனைக்காக கி. ராஜநாராயணன் தொகுத்த வட்டார வழக்குச் சொல்லகராதி (1982), பெருமாள்முருகன் தொகுத்த கொங்கு வட்டாரச் சொல்லகராதி (2000), நான் தொகுத்த தலித் சொல்லகராதி (2002) ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தபோது மூன்றுக்குமிடையில் மிக நெருங்கிய உறவிருப்பது தெரியவந்தது. அந்த ஒப்பீடு தமிழ் வாழ்க்கைமுறை மிக வேகமாக மாறிவருகிறது என்பதைக் காட்டியது.
பிறரைக் காட்டிலும் மொழி குறித்து அக்கறைப்பட வேண்டியவன் எழுத்தாளன்தான். அவன்தான் வார்த்தைகளால் ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கிக் காட்டுகிறான். அதனால் படைப்பில் புதிய எழுத்து முறையை, புதிய மொழியைக் கண்டடைய வேண்டிய அவசியம் எழுத்தாளனுக்குத்தான் இருக்கிறது. அதற்கு அவன் மொழியை நடப்பியல் ஆய்வு முறையோடு, புதிய நோக்கில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மொழி குறித்த தெளிவும் பயிற்சியும் இல்லாமல் உருவாக்கப்படும் படைப்பின் மொழி உயிரற்றதாகவே இருக்கும். பண்டைக்காலத் தமிழை, இடைக்காலத் தமிழை, தற்காலத் தமிழை - தற்காலத் தமிழில் எழுத்து மொழியாக இருந்தாலும் சரி, வட்டார வழக்காக இருந்தாலும் சரி - ஏற்பட்டுள்ள மாற்றங்களை, வளர்ச்சிகளை, முன்னேற்றங்களைக் கணக்கில் கொண்டு செயல்படுவது படைப்பு மொழிக்கு மட்டுமல்ல, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் நல்லது.

குறிப்பு: CIIL, French Institute of Pondicherryயும் இணைந்து நடத்திய வட்டார வழக்குகள் குறித்த கருத்தரங்கில் 13.8.2006இல் படிக்கப்பட்ட கட்டுரை.
நன்றி: காலச்சுவடு